விமானத்திலிருந்து விழுந்த "ஐஸ் கக்கா".. ஏலியன்கள் தந்த கிப்பட்டாக நினைத்து ஏமாந்த கிராமத்தினர்!!
விமானத்திலிருந்து விழுந்த கல் போன்ற பொருளை ஏலியன்களின் பரிசாக கருதிய கிராம மக்கள் ஏமாற்றமடைந்தனர்.
குர்கான்: ஹரியாணா மாநிலத்தில் குர்கானில் ஒரு கிராமத்தில் விமானத்திலிருந்து விழுந்த உறைந்த நிலையிலான மனித கழிவுகளை ஏலியன்களின் கிப்ட்டாக நினைத்து கொண்டு வீடுகளுக்கு கொண்டு சென்ற கிராமத்தினர் உண்மை தெரிந்ததும் ஏமாற்றமடைந்தனர்.
குர்கானில் பசில் பூர் பாத்லி கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்பீர் யாதவ். அவருக்கு கோதுமை வயல் உள்ளது.
நேற்றைய தினம் ராஜ்பீர் வயலில் இறங்கி வேலை பாரத்துக் கொண்டிருந்தார். அப்போது வானிலிருந்து ஏதே பாறை போன்ற அவரது வயலை நோக்கி வருவது தெரிந்தது.
இதனால் ராஜ்பூர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் சுதாரிப்பதற்குள் அது விழுந்துவிட்டது. இதனால் அந்த இடத்தில் ஒரு அடிக்கு பள்ளம் ஏற்பட்டது.
என்ன பொருளாக இருக்கும்?
வானில் இருந்து விழுந்த பொருள் ஏவுகணையா?, வெடிகுண்டா? அல்லது விண் கற்களா ? என தெரியாமல் விழி பிதுங்கினார். உடனே இதுகுறித்து ஊர் தலைவர் சுக்பீர் சிங்கிடம் கூறினார். இதையடுத்து இந்த விவகாரம் காட்டுத் தீ போல் கிராமம் முழுவதும் பரவியது.
மண்டையை பிய்த்து கொண்டனர்
அந்த பாறை போன்ற பொருளை சுற்றி கூட்டம் கூடியது. அது என்னவாக இருக்கும் என பெரியவர்கள் ஆளாளுக்கு மண்டையை பிய்த்து கொண்டனர். அது வெள்ளை நிறத்தில் இருப்பதால் நிச்சயம் ஏலியன் தந்த பரிசாக இருக்கலாம் என்று கிராம சிறுவர்கள் கருதினர். இன்னும் சிலரோ இது ஒரு அரிய வகை தாது பொருள் என்றும் வானிலிருந்து வந்த பொருளாக இருக்கலாம் என்றும் கூறினர். சரி எதுக்கும் மாவட்ட நிர்வாகத்தை அணுகினால் என்னவென்று தெரிந்துவிடும் என்று ஒரு குரல் வந்தது.
வானிலை துறை
கிராம மக்களில் சில பிரதிநிதிகள் மாவட்ட நிர்வாகத்தை அணுகினர். பின்னர் அதிகாரி ஒருவர் தலைமையில் வானிலை மையம், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆகிய அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு சென்றனர். அந்த பொருளின் சில துகள்களை தடயவியல் துறைக்கு அனுப்பினர்.
மக்கள் ஏமாற்றம்
ஆய்வு முடிவுகள் இன்று வெளியானது. அதை கண்டதும் மக்கள் அதிர்ச்சி அடைந்து சீ என்று முகம் சுளித்தனர். காரணம் வானிலிருந்து விழுந்த பொருளுக்கு பெயர் ப்ளூ ஐஸ் ஆகும். அப்படியென்றால் உறைந்த நிலையில் வைக்கப்படும் மனிதக் கழிவுகள் என்ற பொருளாகும். உறை நிலையில் இருந்த கழிவுகள்தான் ராஜ்பீரின் வயலில் விழுந்தது. இது தெரியாமல் ஏலியன் கொடுத்த கிப்ட் என்று கூறி ஏமாற்றமடைந்தது தெரியவந்தது. அந்த பாறை போன்ற பொருளை கொஞ்சம் உடைத்து எடுத்துக் கொண்டு பிரிட்ஜில் வைத்திருந்தனர். அதை எடுத்து எறிய சிலர் பதறியடித்து கொண்டு வீட்டுக்கு ஓடினர்.
இதை பார்க்கும்போது சின்னவர் படத்தில் கவுண்டமணி வலை வீசி அதில் ஒரு செந்தில் சிக்கியிருப்பார். அது தெரிவதற்குள் மீனவர்கள் திமிங்கலம் என நினைத்து தோல் பல கோடி போகும், பல் பல லட்சங்கள் போகும் என்று ஆளாளுக்கு கதை அளந்துவிடுவர் .அந்த சீன்தான் கண் முன் நிழலாடுகிறது.