தேரா சச்சா சவுதா தலைவர் மீதான பாலியல் வழக்கில் நாளை தீர்ப்பு: ஹரியானா, பஞ்சாப்பில் பதற்றம்
தேரா சச்சா சவுதா தலைவர் குர்மித் ராம் ரகீம் சிங் மீதான பாலியல் வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாக உள்ளதால் ஹரியானா மற்றும் பஞ்சாப்பில் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் போலீசார் அதிகம் குவிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லி: தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் மீதான பாலியல் புகார் வழக்கில் நாளைத் தீர்ப்பு வர இருப்பதால் ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் பதற்றம் நிலவி வருகிறது.
ஹரியானா மாநிலம் சிர்ஸாவில் செயல்பட்டு வருகிறது தேரா சச்சா சவுதா அமைப்பு. அதன் தலைவர் குர்மித் ராம் ரகீம் சிங், 2 பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதனைத் தொடர்ந்து குர்மித் ராம் ரகீம் சிங் மீது கடந்த 2002ம் ஆண்டு சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தது. ஹரியானா மாநிலத்தில் பஞ்ச்குலா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் நாளைத் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. மேலும், குர்மித் நாளை நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வன்முறை வெடிக்கும் அபாயம்
குர்மித் ராம் ரகீமுக்கு ஏராளமான ஆதரவாளர்கள் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் உள்ளனர். குர்மித்துக்கு எதிராகத் தீர்ப்பு வரும்பட்சத்தில் கலவரம் வெடிக்கும் சூழல் இரு மாநிலங்களிலும் நிலவு வருகிறது.
துணை ராணுவம் அணி வகுப்பு
இதனால் இரு மாநிலங்களிலும் பதற்றம் அதிகமுள்ள பகுதிகளில் போலீசாரும், துணை ராணுவப் படையினரும் கொடி அணி வகுப்பு நடத்தினர். மேலும், நாளை இரு மாநிலங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தற்காலிக சிறையான கிரிக்கெட் ஸ்டேடியம்
இப்போதே பஞ்ச்குலா நகரில் உள்ள தேரா அமைப்பின் மண்டபத்தில் அவரது ஆதரவாளர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் சட்டம், ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் சமாளிக்க சண்டிகரில் செக்டார் 16-ல் உள்ள கிரிக்கெட் ஸ்டேடியத்தை தற்காலிக சிறையாக அறிவிக்க சண்டிகர் யூனியன் பிரதேசம் முடிவு செய்துள்ளது.
கொலை வழக்கு
இந்த வழக்கின் தீர்ப்பிற்கு பின்னர் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் வகையில் யார் நடந்து கொண்டாலும் தற்காலிக சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று போலீஸ் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
குர்மித் ராம் ரகீம் சிங் மீது பாலியல் பலாத்கார வழக்கு மட்டும் அல்லாமல் கொலை வழக்கும் உள்ளது. பத்திரிகையாளர் ஒருவர் தேரா அமைப்பைப் பற்றி புலனாய்வு செய்தி ஒன்றை வெளியிட்டதால் அவர் கொல்லப்பட்டார். இந்தக் குற்றச்சாட்டும் குர்மித் மீது உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.