ஹரியானா: ஆன்லைனில் டீச்சருக்கு பலாத்கார மிரட்டல் விடுத்த 7ம் வகுப்பு மாணவர் சஸ்பெண்ட்
வகுப்பாசிரியைக்கு பலாத்கார மிரட்டல் விடுத்த 7ம் வகுப்பு மாணவரை பள்ளி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.
டெல்லி: ஹரியானாவில் 7ம் வகுப்பு மாணவர் ஒருவர் தனது ஆசிரியையையும், அவரது மகளையும் பாலியல் பலாத்காரம் செய்து விடுவதாக ஆன்லைனில் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலத்தில் உள்ள மிகப்பெரிய நகரங்களுள் ஒன்று குருகிராம். டெல்லிக்கு அருகில் அமைந்துள்ள இந்நகரில் இயங்கிவரும் தனியார் பள்ளி ஒன்றில் 7ம் வகுப்பு படித்து வரும் மாணவர் ஒருவர், தனது வகுப்பாசிரியைக்கு இணையம் வாயிலாக மிரட்டல் பதிவு ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில் அவர், ஆசிரியையும் அவரது மகளையும் பாலியல் பலாத்காரம் செய்யப் போவதாக மிரட்டியுள்ளார். ஆசிரியையின் மகளும் அதே வகுப்பில் படித்து வருபவர் தான்.
இந்த மிரட்டல் குறித்து ஆசிரியை அளித்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட மாணவரிடம் விசாரணை மேற்கொண்டு, அவரை தற்காலிக இடைநீக்கம் செய்ததுடன், உளவியல் தொடர்பான கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட ஆசிரியை மற்றும் அவரின் மகள் பெயர் வெளியே தெரிந்துவிடக் கூடாது என்பதால், அம்மாணவர் பயிலும் பள்ளியின் பெயரை வெளியிட போலீசார் மறுத்து விட்டனர்.
இந்த சம்பவம் நடைபெறுவதற்கு கொஞ்சகாலம் முன்பு தான் இதே பள்ளியில் பயிலும் மற்றொரு 8ம் வகுப்பு மாணவர், தனது ஆசிரியையை உல்லாசமாக இருக்க ஈமெயில் மூலம் அழைத்த அதிர்ச்சி தரும் சம்பவம் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக உளவியல் நிபுணர்கள் கூறுகையில், “இணையத்தின் வாயிலாக இன்று குழந்தைகளின் கண்களுக்கு வன்முறை, திருட்டு, கொலை, பலாத்காரம் என அனைத்து தீய விசயங்களுமே எளிதாகக் கிடைக்கின்றன. பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்களும் நல்ல மற்றும் தீய தொடுதல் குறித்த விளக்கங்களை அளிக்கவும் மறந்து விடுகின்றனர். இதனால் எளிதாக மாணவர்கள் தீய வழிக்கு திசை மாற வாய்ப்புகள் அதிகமாகி விடுகிறது. எனவே, வீட்டில் பெற்றோர் தங்கள் குழந்தைகள் இணையத்தில் என்னமாதிரியான விசயங்களைப் பார்க்கின்றனர் என்பதைக் கண்காணிக்க வேண்டும். அதேபோல், பள்ளியிலும் ஆசிரியர்கள் தங்களால் இயன்றளவிற்கு இணையத்தின் தீமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அப்போது குழந்தைகளை திசை மாறிப் போய்விடாமல் காப்பாற்ற முடியும்” என்கின்றனர்.