கல்யாணத்துக்கு வற்புறுத்திய "பார்ட்னர்".. 32 இடங்களில் வெட்டித் தள்ளிய கொடூரக் காதலன்!
நோய்டா: திருமணம் செய்யாமலேயே இணைந்து வாழ்ந்து வந்த நிலையில் திடீரென தனது காதலி திருமணத்திற்கு வற்புறுத்தி வந்ததால் ஆத்திரமடைந்த காதலர், தனது காதலியை சரமாரியாக வெட்டித் தள்ளிவிட்டார். படுகாயமடைந்த காதலி தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது உடலில் 32 இடங்களில் வெட்டு விழுந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். போலீஸார் தற்போது காதலர் வருண் கோயல் என்பவரை காஸியாபாத்தில் வைத்துக் கைது செய்துள்ளனர். 28 வயதான இவர் ஜிம் ஒன்றை நடத்தி வருகிறார்.
அவரும் விவாகரத்து செய்த ஒரு பெண்ணும் திருமணம் செய்து கொள்ளாமலேயே சேர்ந்து வாழ்ந்து வந்தனர். ஆனால் சமீப காலமாக அப்பெண் திருமணத்திற்கு வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால் வருண் கோயல் அதை விரும்பவில்லை.
இந்த நிலையில் சம்பவத்தன்றும் வாக்குவாதம் வெடிக்கவே கத்தியை எடுத்து சரமாரியாக குத்த ஆரம்பித்தார். பெண்ணின் அலறல் கேட்டு அக்கம் பக்கத்தினர் போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் வந்து பார்த்தபோது அப்பெண் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார். அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர் டெல்லியில் உள்ள லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயணன் மருத்துவமனைக்கு மாற்றினர்.