சித்தராமையா அரசு படுமோசம்... முன்னாள் பிரதமர் தேவ கவுடா கடும் பாய்ச்சல்
சித்தராமையா அரசு படுமோசம் என சாடியுள்ளார் முன்னாள் பிரதமர் தேவ கவுடா.
பெங்களூரு: கர்நாடகா முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு படுமோசம் என சீறியிருக்கிறார் முன்னாள் பிரதமர் தேவ கவுடா.
கர்நாடகா சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. காங்கிரஸ் கட்சி ஆட்சியைத் தக்க வைக்க போராடுகிறது.
பாஜகவோ, தேவ கவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் இணைந்து ஆட்சியை பிடிக்க வியூகம் வகுத்துக் கொண்டிருக்கிறது. இது தொடர்பாக ஒக்கலிகா மடாதிபதிகளையும் பாஜக சந்தித்து வருகிறது.
ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு
இதனிடையே ஹாசன் மாவட்டத்தில் சரவணபெலகுலாவில் பிப்ரவரி 7-ந் தேதியன்று 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஜைன மதத்தின் மகாவீரர் தொடர்பான விழா நடைபெற உள்ளது. அதில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் தேவ கவுடா, கர்நாடகா முதல்வர் சித்தாரமையா உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
சர்ச்சையான டிரான்ஸ்பர்
இந்நிலையில் திடீரென ஹாசன் துணை கமிஷனர் ரோஹினி சிந்தூரி இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை ரோஹினி சிந்தூரி மேற்கொண்டு வந்த நிலையில் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மோசமான அரசு என சாடல்
இது தொடர்பாக முன்னாள் பிரதமர் தேவ கவுடா கூறியதாவது: என்னுடைய வாழ்க்கையில் இதுபோன்ற மோசமான ஒரு அரசாங்கத்தைப் பார்த்தது இல்லை. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வர உள்ள நிலையில் துணை கமிஷனரை திடீரென அரசியல்வாதிகள் ஆதாயம் பெறுவதற்காக மாற்றியிருக்கிறது அரசு.
ஜனாதிபதிக்கு கடிதம்
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் முதல்வர் சித்தராமையாவுடன் இணைந்து அந்த மேடையில் அமர மாட்டேன். இது தொடர்பாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் எழுத இருக்கிறேன்.
இவ்வாறு தேவ கவுடா கூறினார்.