சிரமத்துக்கு வருந்துகிறேன்... நிர்மலா சீதாராமன் விவகாரத்தில் குமாரசாமி பதுங்கல்
பெங்களூர்: நிர்மலா சீதாராமனுக்கும் மாநில அமைச்சருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினைக்கு வருந்துகிறேன் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
குடகு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வந்திருந்தார். அந்த பணிகளை முடித்துக் கொண்டு அவர் ஓய்வு பெற்ற ராணுவத்தினரை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது வெள்ள நிவாரண அறிக்கையை சமர்ப்பிக்க அதிகாரிகள் காத்துக் கொண்டிருப்பதால் ராணுவத்தினருடனான சந்திப்பை தற்போது விட்டுவிட்டு அதிகாரிகளை சந்திக்குமாறு மாநில அமைச்சர் ரமேஷ் கேட்டுக் கொண்டார்.
விளக்கம்
இதனால் நிர்மலா சீதாராமனுக்கு கோபம் உச்சத்தில் ஏறியது. பொது இடம் என்றும் பாராமல் அமைச்சரை கடும் கோபத்துடன் திட்டினார். இதையடுத்து பாதுகாப்பு துறை அமைச்சகம் நேற்று விளக்கம் அளித்தது.
மனவேதனை
இதைத் தொடர்ந்து மாநில முதல்வர் குமாரசாமியும் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் நிர்மலா சீதாராமன் குடகில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட வந்த போது ஏற்பட்ட சம்பவங்களால் மனவேதனை அடைந்தேன்.
வருத்தம்
நிர்மலா சீதாராமன் வந்தபோது ஏற்பட்ட கடினமான நிலையிலும் மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் அவரது பாதுகாப்பை உறுதி செய்தது. எனினும் அசம்பாவித சம்பவங்களை நிர்மலா சீதாராமன் சந்தித்ததற்கு நான் வருந்துகிறேன்.
|
உதவிக்கரம்
இந்த நேரத்தில் வேறுபாடுகளை மறந்து ஒருவரை ஒருவர் மன்னித்துக் கொண்டு வெள்ளம் பாதித்த பகுதி மக்களின் மறுவாழ்வுக்கு உதவி கரம் நீட்ட வேண்டும். மத்திய அரசின் குறிப்பாக பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் ஆதரவை நான் எதிர்நோக்கியுள்ளேன் என்று குமாரசாமி தெரிவித்துள்ளார்.