மோடியின் செல்போன் ஆப் மூலம் ரகசியங்கள் லீக்காகும்.. குண்டு போடும் மும்பை 'ஹேக்கர்'
மும்பை: பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ செல்போன் செயலியான 'நரேந்திர மோடி ஆப்' பயனர்களின் தகவல்களை அம்பலப்படுத்துவதாக மும்பையை சேர்ந்த ஆப் டெவலப்பர் ஜாவேத் காத்ரி என்பவர் குற்றம்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நரேந்திர மோடி ஆப் என்ற பெயரில் வெளியாகியுள்ள ஆப்பில் அவரது உரை, பண மதிப்பிழப்பு கருத்துக் கணிப்பு போன்றவை உள்ளன. 2000 நோட்டை அந்த ஆப் மூலம் ஸ்கேன் செய்தால், மோடி உரையும் அதில் வரும்.
ஆனால், இந்த ஆப் சரியான பாதுகாப்பு கொண்டிருக்கவில்லை என்று கண்டுபிடித்துள்ளார் காத்ரி. இந்த தகவலை ஆப் வடிவமைப்பாளர்களுக்கு தெரிவிக்க முயன்றுள்ளார். ஆனால் காத்ரியால் அவர்களை தொடர்பு கொள்ள இயலாத சூழ்நிலையில் ஆப் பிழை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
நரேந்திர மோடி ஆப்பை ஹேக் செய்து இந்த பிழையை கண்டறிந்ததாகவும், பிழையை மட்டும் எடுத்துக் காட்ட விரும்பியதாகவும் தெரிவித்திருக்கிறார். ஆப் வைத்திருப்போரின் செல்போன் தகவல்களை யார் வேண்டுமானாலும் பார்க்கக் கூடிய அளவில் இருக்கிறது என்றாலும், இது மிகப் பெரிய பாதுகாப்பு பிரச்சினை இல்லை என தெரிவித்துள்ளார்.
ஆப் வைத்திருக்கும் செல்போன் பயனாளர்கள் தகவல்கள் இணையத்தில் சேமிக்கப்பட்டிருப்பதால் இணைய இணைப்பு கொண்ட யார் வேண்டுமானாலும் பயனர்களின் தகவல்களை எளிமையாக பார்க்க முடியும் என காத்ரி எச்சரிக்கிறார். தன்னை போல பிறரும் ஹேக் செய்ய கூடும் என்பதால் அந்த தகவலை தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.