பாஜக கூட்டணியில் இருந்திருந்தால் நிதிஷ்குமார் தோற்றிருக்க மாட்டார்: சிவசேனா
மும்பை: பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்திருந்தால், நிதிஷ் குமார் இதுபோன்ற தோல்வியை சந்தித்திருக்க மாட்டார் என கருத்துத் தெரிவித்துள்ளது சிவசேனா.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகுவதாக அம்மாநில முதலமைச்சரும், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான நிதிஷ்குமார் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து புதிய முதல்வராக ஜிதன்ராம் மஞ்சி தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
இந்நிலையில் பீகார் நிலவரம் குறித்து சாம்னாவில் சிவசேனா வெளியிட்டுள்ள தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:-
லோக்சபா தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் பீகாரில் சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று முதல்வர் நிதிஷ்குமார் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார். மோடி சூறாவளி, பீகார் முழுவதையும் வலுவாக தாக்கியுள்ளது. ஐக்கிய ஜனதா தளம் மட்டுமின்றி லல்லு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரசும் சாம்பலாகியுள்ளன.
நரேந்திர மோடியை பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவித்த பிறகு, பீகாரில் முஸ்லிம்கள் மற்றும் தலித்துகள் ஆதரவு அளிப்பதை நிறுத்திவிடுவார்கள் என்ற பயத்தில் நிதிஷ் குமார் தேசிய ஜனநாயக கூட்டணியுடனான உறவை முறித்துக்கொண்டார்.
ஆனால், பீகாரில் முஸ்லிம்கள் அதிகம் உள்ள தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி பெற்றுள்ளது. மோடியை எதிர்த்ததால் நிதிஷ் அடைந்த லாபம் என்ன? தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்திருந்தால், அவர் இதுபோன்ற அவமானத்தை சந்தித்திருக்க மாட்டார்.
நிதிஷ் குமார் ராஜினாமா கடிதம் கொடுத்தது வெறும் நாடகம். நிதிஷ் போன்று மகாராஷ்டிர முதல்வர் சவுகானும், காங்கிரஸ் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.