ஆம் ஆத்மி தலைவர் பதவியில் இருந்து கேஜ்ரிவால் ராஜினாமா- நிராகரிப்பு
டெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்து டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அனுப்பிய கடிதத்தை நிராகரித்துவிட்டோம் என்று அக்கட்சியின் மூத்த தலைவரான யோகேந்திர யாதவ் கூறியுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பிரசாந்த் பூஷன் அண்மையில் அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அதில், ஆம் ஆத்மி கட்சியில் அனைத்து அதிகாரங்களும் ஒரு தனி நபரிடமே (கேஜ்ரிவாலிடம்) உள்ளன. ஒரு நபரை மையப்படுத்திய அதிகாரம் தேர்தல் பிரச்சாரத்துக்கு வேண்டுமானால் எடுபடலாம். ஆனால் காலப்போக்கில் அது நன்மை பயக்காது. ஒரு நபர் ஆளுமையில் இருந்து விடுபட வேண்டிய தருணம் வந்துவிட்டது" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அத்துடன் இதே பிரச்சினை தொடர்பாக 7 மாதங்களுக்கு முன்னதாக யோகேந்திர யாதவ் கருத்து கூறியிருப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டியிருந்தார். இதனால் ஆம் ஆத்மியில் உட்கட்சி மோதல் வெடித்தது.
கடந்த 6-ந் தேதியன்று டெல்லியில் நடைபெற்ற ஆம் ஆத்மியின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இதனைத் தொடர்ந்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக கட்சிக்கு அரவிந்த் கேஜ்ரிவால் ஒரு கடிதத்தை அனுப்பியிருக்கிறார்.
I am deeply hurt and pained by what is going on in the party. This is betrayal of trust that Delhi posed in us(1/2)
— Arvind Kejriwal (@ArvindKejriwal) March 3, 2015
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள யோகேந்திர யாதவ், அரவிந்த் கேஜ்ரிவால் ராஜினாமா செய்து கடிதம் அனுப்பியிருந்தார். ஆனால் அதனை நானும் பிரசாந்த் பூஷனும் நிராகரித்துவிட்டோம். கேஜ்ரிவால் தொடர்ந்தும் தேசிய ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார் என்றும் யோகேந்திர யாதவ் கூறியிருக்கிறார்.
கேஜ்ரிவால் வேதனை
இதனிடையே உட்கட்சி மோதல் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள கேஜ்ரிவால், இது தம்மை மிகவும் காயப்படுத்துகிறது; தமக்கு மிகவும் வேதனை தரக் கூடியதாக இருக்கிறது; டெல்லி மக்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்வதாகும்" என்று வருத்தம் தெரிவித்திருக்கிறார்.