கணவருடன் பேச அனுமதிப்பதா? சேலம் கல்லூரிக்கு எதிராக ஹாதியா தந்தை சுப்ரீம்கோர்ட்டில் மனு
ஹாதியாவை கணவருடன் பேச அனுமதிப்பதை எதிர்த்து அவரது தந்தை அசோகன் சேலம் கல்லூரிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய உள்ளார்.
டெல்லி: ஹாதியாவை தமது கணவருடன் பேசவும் செய்தியாளர்களை சந்திக்கவும் அனுமதித்த சேலம் ஹோமியோபதி மருத்துவ கல்லூரிக்கு எதிராக அவரது தந்தை அசோக் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்ய உள்ளார்.
கேரளா மாணவி அகிலா மதம் மாறி ஹாதியா என்ற பெயருடன் தமது காதலரை திருமணம் செய்தார். இதற்கு அகிலாவின் தந்தை அசோக் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.
அப்போது, ஹாதியா தாம் தொடர்ந்து படிக்க விரும்புவதாகவும் தமக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவும் கோரியிருந்தார். இதை ஏற்று உச்சநீதிமன்றம் சேலம் சிவராஜ் ஹோமியோபதி மருத்துவ கல்லூரி டீன் கண்ணனை ஹாதியாவின் பாதுகாவலராக உத்தரவிட்டு அவரை தொடர்ந்து படிக்க அனுமதித்தது.
அதேநேரத்தில் கணவரை சந்திக்கக் கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகளையும் உச்சநீதிமன்றம் விதித்திருந்தது. இந்நிலையில் நேற்று கல்லூரிக்கு வந்த ஹாதியா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது தமது கணவர் ஷெபினுடன் 8 மாதங்களுக்கு பின் செல்போனில் பேசியதாகவும் அவரை சந்திக்க சில நாட்களில் சந்திக்க இருப்பதாகவும் கூறினார்.
அதேபோல் கல்லூரி டீன் கண்ணனும் ஹாதியாவின் கணவர் ஷெபீன், உரிய வழிமுறைகளில் கல்லூரியை தொடர்பு கொண்டால் ஹாதியாவை சந்திக்க அனுமதிப்போம் என கூறியிருந்தார். இவை அனைத்துமே நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிரானது என ஹாதியா என்ற அகிலாவின் தந்தை அசோகன் உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர இருக்கிறார்.