படிப்பை தொடர உதவுங்கள்... என் கணவர் என்னை கவனித்துக்கொள்வார் - ஹாதியா
தனது படிப்பை சுதந்திரமாக தொடர விரும்புவதாக உச்சநீதிமன்றத்தில் லவ் ஜிகாத் வழக்கில் தொடர்புடைய ஹாதியா கூறியுள்ளார்.
Recommended Video
டெல்லி: சேலம் ஹோமியோபதி மருத்துவக்கல்லூரியில் தனது படிப்பை சுதந்திரமாக தொடர விரும்புவதாக உச்சநீதிமன்றத்தில் ஹாதியா கூறியுள்ளார். தனது கணவர் தன்னை கவனித்துக் கொள்வார் என்றும் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம், வைக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அசோகன். இவரது ஒரே மகள் அகிலா. 12ஆம் வகுப்புத் தேர்வில் தோல்வியடைந்த அடைந்த அகிலா, இரண்டாவது முயற்சியில் தேர்ச்சியடைந்தார். இதையடுத்து ஹோமியோபதி மருத்துவம் மற்றும் அறுவைசிகிச்சையில் இளநிலை படிப்பு படிப்பதற்காக சேலத்திற்கு வந்தார்.
வாடகை வீட்டில் தங்கி படித்து வந்த அவருடன் இரண்டு இந்து மாணவிகள் மற்றும் இரண்டு இஸ்லாமிய மாணவிகளும் தங்கியுள்ளனர். இஸ்லாம் மீதான ஈர்ப்பு அதிகரிக்கவே, தானும் மதம் மாற விரும்பினார்.
2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மல்லாப்புரம் மாவட்டத்தின் பெரிந்தால்மன்னா நகரில் உள்ள ஜெசீனாவின் வீட்டுக்கு அகிலா சென்றார். ஜெசீனாவின் தந்தையிடம் இஸ்லாம் மதத்துக்கு மாற வேண்டும் என்ற தனது ஆசையையும் அவர் கூறினார்.
சில நாட்களில் மீண்டும் கல்லூரிக்கு திரும்பிய அகிலா இஸ்லாமிய பெண்களை போன்று தலையில் ஸ்கார்ப் அணிந்து சென்றார். இந்தத் தகவலை அவளது வகுப்பு தோழிகள் அவளின் தந்தைக்கு தெரிவித்துள்ளனர்.
அகிலாவின் பெற்றோர் சேலத்துக்கு வருவதற்குள் அவர் சேலத்தில் இருந்து தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து 2016 ஜனவரி 7ஆம் தேதி தனது மகளைக் காணவில்லை என்றும் அபுபக்கர் பாதுகாப்பில் அவர் இருக்கலாம் என்றும் பெரிந்தால்மன்னா காவல் நிலையத்தில் அசோகன் புகார் அளித்தார்.
அகிலாவின் பெற்றோர் மனு தாக்கல்
இதுதொடர்பாக கேரள உயர் நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனுவையும் தாக்கல் செய்தார். இதனடிப்படையில், 57ஆவது பிரிவின் கீழ் அபுபக்கரை கைது செய்த போலீஸார், பின்னர் இருவேறு இனக் குழுக்களிடையே பகையை ஏற்படுத்துவதாகவும், ஒரு சாரரின் மத நம்பிக்கையை இழிவுப்படுத்துவதாகவும் வழக்கு பதியப்பட்டது.
சிரியாவிற்கு கடத்த உள்ளதாக வழக்கு
2016 ஏப்ரல் 17ஆம் தேதி இஸ்லாமிய மேட்ரிமோனியல் தளத்தில் தனது பெயரை ஹாதியா என்று பதிவு செய்தார். அதில்அறிமுகமான ஷபின் ஜஹான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஹாதியாவின் தந்தை நீதிமன்றத்தில் இரண்டாவது ஹேபியஸ் கார்பஸ் மனுவைத் தாக்கல் செய்தார்.
பெற்றோர் குற்றச்சாட்டு
ஷபின் ஜகான் தனது மகளை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும் சிரியாவில் ஐஎஸ் தீவிரவாத ஆதிக்கம் நிறைந்த பகுதியில் பணி அமர்த்தவே திருமணம் செய்து கொண்டதாகவும் அசோகன் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
ஹாதியாவான அகிலா
ஆனால், நீதிமன்றத்தில் ஆஜரான அகிலா இதை மறுத்ததையடுத்து இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்கிடையே, ஜூலை 2016இல் தனது பெயரை ஹாதியா என்று மாற்றிக்கொண்ட அவர், இஸ்லாமிய மதத்துக்கு மாறிய அதிகாரபூர்வச் சான்றிதழையும் பெற்றுள்ளார்.
திருமணம் ரத்து
இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், திருமணத்தை கடந்த மே 24ஆம் தேதி ரத்து செய்தது. மேலும் அசோகனோடு அவரது மகளை அனுப்பி வைக்க உத்தரவிட்டது. இந்நிலையில் இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஷபின் ஜகான் மேல் முறையீடு செய்தார்.
ஹாதியாவிடம் விசாரணை
இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் இவ்வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க வேண்டும் என கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி உத்தரவிட்டது. ஹாதியாவிடம் விசாரணை மேற்கொள்ள இயலவில்லை என என்ஐஏ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதால் ஹாதியாவை நவம்பர் 27ஆம் தேதி ஆஜர்படுத்தவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
உச்சநீதிமன்றத்தில் ஆஜர்
இதனையடுத்து கொச்சியில் இருந்து அவர் விமானம் மூலம் டெல்லிக்கு சென்றார். உச்சநீதிமன்றத்தில் ஆஜரான அவர் அகிலாவான தான் எப்படி ஹாதியாவாக மாறினேன் என்று விளக்கம் அளித்தார். அப்போது நீதிபதிகள் சில கேள்விகளை எழுப்பினர். படிப்பை தொடர விரும்புகிறீர்களா? கேரளா அரசின் உதவி உங்களுக்குத் தேவையா என்றும் கேட்டனர்.
சுதந்திரமாக படிக்க விருப்பம்
தான் சுதந்திரமாக படிப்பை தொடர விரும்புவதாகவும், சேலம் ஹோமியோபதி மருத்துவக்கல்லூரியில் படிப்பேன் என்றும் நீதிபதிகளிடம் கூறினார். தன்னை தனது கணவர் கவனித்துக்கொள்வார் என்றும் தெரிவித்தார் ஹாதியா.
தமிழக போலீஸ் பாதுகாப்பு
இதனையடுத்து சேலம் மருத்துவக்கல்லூரியில் ஹோமியோபதி படிப்பை தொடர நீதிபதிகள் அனுமதி அளித்தனர். ஹாதியா பயிலும் சேலம் சித்த மருத்துவக் கல்லூரி முதல்வரை பாதுகாவலராக நியமனம் செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். சேலத்தில் 11 மாதங்கள் தங்கி ஹதியா பயிலும்போது பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் ஆணை பிறப்பித்தனர். மேலும் ஹதியாவை பெற்றோர் மற்றும் கணவர் சந்திக்கவும் நீதிபதிகள் அனுமதி அளித்தனர். வழக்கு விசாரணையை நாளைக்கு மீண்டும் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.