ஹபீஸ் சயீத் சுதந்திரமாக நாடு முழுவதும் உலவலாமாம்: சொல்வது பாக். தூதர் அப்துல் பாஷித்
டெல்லி: பாகிஸ்தானியரான ஹபீஸ் சயீத் சுதந்திரமாக தனது சொந்த நாட்டில் சுதந்திரமாக உலவலாம் என்றும் அதில் என்ன பிரச்சினை என்று இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாஷித் தெரிவித்துள்ளார்.
மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாக ஹபீஸ் சயீத் மீது இந்தியா குற்றம்சாட்டி வருகிறது. பாகிஸ்தானில் இருந்து இயங்கி வரும் தீவிரவாத இயக்கமான லஷ்கர் இ தொய்பாவின், தாய் அமைப்பான ஜமாத் உத் தவாவின் தலைவராக ஹபீஸ் சயீத்தை அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளன.
சுதந்திர நடமாட்டம்
இந்தியாவால் தேடப்படும் தீவிரவாதிகளின் பட்டியலில் மிக முக்கிய இடம் பிடித்திருக்கும் ஹபீஸ் சயீத் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடமாடுவதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாஷித்திடம் இது குறித்து கேள்வி எழுப்பட்டது.
உரிமை உண்டு
அதற்கு பதிலளித்த அவர், ஹபீஸ் சயீது ஒரு பாகிஸ்தான் நாட்டவர் என்றும் அவர் பாகிஸ்தானில் எந்த ஒரு பகுதியிலும் சுதந்திரமாக உலவலாம் என்றும் அதில் உங்களுக்கு என்ன பிரச்னை என கேள்வி எழுப்பினார்.
பாகிஸ்தான் தூதரின் சர்ச்சை
இந்தியாவில் மிகப்பெரும் தீவிரவாத தாக்குதலை நடத்த ஹபீஸ் சயீத் திட்டமிட்டுள்ளதற்கான வாய்ப்புகள் இருப்பதாக இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பாகிஸ்தான் தூதரின் பேச்சு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே காஷ்மீர் பிரிவினைவாத இயக்கங்களை டெல்லியில் அழைத்து பேசி அப்துல் பாஷித் சர்ச்சையில் சிக்கியதும் குறிப்பிடத்தக்கது.