"காவி மயமாகும் உத்தரபிரதேசம்..." - ஹஜ் பயணிகள் தங்கும் விடுதிக்கு காவி நிற பெயிண்ட்
உத்தரபிரதேசத்தில் ஹஜ் யாத்திரீகர்கள் தங்கும் விடுதியின் சுவற்றுக்கு காவி நிறத்தில் பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ: உத்தரபிரதேசத்தில் பல அரசு கட்டிடங்கள் மற்றும் சுவர் காவி நிறத்தில் பெயிண்ட் அடிக்கப்பட்டு வரும் வேளையில், ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்களின் தங்கும் விடுதிக்கும் காவி நிற பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்றதிலிருந்து இந்து மத அடையாளங்களை மாநிலம் முழுவதும் நிரப்புவதில் அவர் மும்முரம் காட்டி வருகிறார். இந்நிலையில் அவர் லக்னோவில் உள்ள ஹஜ் தங்கும் விடுதியின் சுவர்களுக்கு காவி நிறத்தில் பெயிண்ட் அடித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்துக்களின் ஆன்மீக நிறமாக பார்க்கப்படும் காவியை, இஸ்லாமியர்கள் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் விடுதிக்கு அடித்ததன் மூலமாக மனரீதியாக மத காழ்ப்புணர்ச்சிகளை மக்கள் மனதில் அவர் விதைப்பதாக எதிர்க்கட்சியினர் யோகி மீது குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
ஆனால் எதைப்பற்றியும் கவலைப்படாத யோகி, உத்தரபிரதேசத்தையே காவி நிறத்தில் மாற்றும் பணியில் தீவிரவாக ஈடுபட்டு வருகிறார். எப்போதும் காவி உடையில் காட்சிதரும் யோகி விரைவில் எங்கும் காவி எதிலும் காவி என்று உருவாக்கி விடுவார் என்றே அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
மதரஸாக்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடிவெடுத்துள்ள யோகி, ஹஜ் விடுதியின் மீது காவி நிற அடிக்கப்பட்டுள்ளது இஸ்லாமியர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.