ஹஜ் மானியம் ரத்து: என்ன சொல்கிறார்கள் இஸ்லாமியர்கள்?
இஸ்லாமியர்களுக்கு ஹஜ் பயணம் மேற்கொள்ள வழங்கப்பட்டு வந்த மானியத்தை ரத்து செய்ய மோதி அரசு முடிவு செய்துள்ளது. மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி இதைத் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூபாய் 700 கோடி மிச்சம் ஆகும் என்றும், அந்தப் பணம் சிறுபான்மையினருக்கு, குறிப்பாக மாணவிகளுகளுக்கு, திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க செலவிடப்படும் என்று அவர் கூறினார்.
இது சிறுபான்மையினரை வசீகரிக்க முயலாமல் அவர்களை வலுப்படுத்தும் முயற்சி என்று அரசு கூறியுள்ளது.
- 'அமர்நாத் கோயிலை 500 ஆண்டுக்கு முன்பு அடையாளம் கண்ட இஸ்லாமியர்'
- சௌதி: கால்பந்து மைதானங்களில் முதல் முறையாக பெண்களுக்கு அனுமதி
சுதந்திரத்துக்குப்பிறகு மானியம் இல்லாமல் 1.75 லட்சம் இஸ்லாமியர்கள் இந்த ஆண்டு ஹஜ் செல்லவுள்ளனர். கடந்த ஆண்டு 1.25 லட்சம் பேர் மானியத்துடன் ஹஜ் பயணம் மேற்கொண்டனர்.
வரும் 2022ஆம் ஆண்டுக்குள் படிப்படியாகக் குறைத்து, ஹஜ் மானியத்தை நிறுத்துமாறு உச்ச நீதிமன்றம் அரசிடம் கூறி இருந்தது.
ஹஜ் பயணம் மேற்கொள்வதை ஊக்குவிக்க கடல் வழியாக கப்பலில் மெக்கா செல்ல வாய்ப்பு வழங்கப்படும் என்று நக்வி கூறியுள்ளார்.
ஹஜ் மானியம் என்பது விமானப் பயணம் மேற்கொள்வதற்காக வழங்கப்படும் மானியம் ஆகும். அந்தப் பணம் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு அரசால் வழக்கப்பட்டு வந்தது.
இஸ்லாமிய மத அமைப்புகளும், அசாதுதீன் ஒவைசி உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த மானியத்தை ரத்து செய்யவேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். இது இஸ்லாமியர்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள அவர்கள் விரும்பும் முறையைத் தேர்ந்தெடுக்க வழிவகை செய்யவில்லை என்று அவர்கள் கூறி இருந்தனர்.
"கடந்த 25 ஆண்டுகளாக இது ரத்து செய்யப்பட வேண்டும் என்று நாங்கள் கூறி வருகிறோம். ஏனெனில், இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படுகிறது எனும் பெயரில் அந்த மானியம் ஏர் இந்தியா நிறுவனத்துக்கே வழங்கப்பட்டு வந்தது," என்று அகில இந்திய மஜ்லிஸ் மஷ்வராத் எனும் இஸ்லாமிய அமைப்பின் தலைவர் நவீத் ஹமீது பிபிசியின் வத்சல்யா ராயிடம் கூறினார்.
ஹஜ் பயணம் மேற்கொள்ள, 2017-இல் அதிகபட்சமாக கேரளாவில் இருந்து சுமார் 95,000 விண்ணப்பங்கள் வந்துள்ளன. மஹாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் இருந்து சுமார் 57,000 விண்ணப்பங்கள் வந்துள்ளன. உத்திரப்பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இருந்து முறையே 52,000 மற்றும் 35,000 விண்ணப்பங்கள் வந்துள்ளன என்று மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சக விவரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2017-இல் தமிழகத்துக்கு ஹஜ் மானியம் பெற 3,000 இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. நாட்டிலேயே அதிகபட்சமாக உத்திரப்பிரதேசத்துக்கு 28,000 இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.
பிற செய்திகள்:
- ''நமது நாடு தமிழ்நாடா?, இந்தியாவா?''
- அமெரிக்க அதிபர் டிரம்ப் நல்ல அறிவாற்றலுடன் உள்ளார்: மருத்துவர்
- ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்
- கார் விபத்தில் சிக்கிய மகன்: ஹெலிகாப்டரில் சென்று மீட்ட தந்தை
- அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: சீறிப் பாய்ந்த காளைகள் (புகைப்பட தொகுப்பு)
- வாரம் 1,500 ரோஹிஞ்சா அகதிகளைத் திரும்பப் பெற மியான்மர் ஒப்புதல்
- "லிபிய அதிபர் பாணியில் முகாபே கொல்லப்படுவார் என்று அஞ்சினேன்"