எச்.ஏ.எல். தயாரித்த முதல் பயிற்சி விமான வெள்ளோட்டம் வெற்றி!
பெங்களூரு: இந்திய விமானப் படைக்காக தயாரித்துள்ள முதல் பயிற்சி விமானத்தை இன்று இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் வெற்றிகரமாக வெள்ளோட்டம் விட்டது.
வெள்ளோட்டம் வெற்றிகரமாக இருந்ததாக எச்ஏஎல் நிறுவனம் தெரிவித்துள்ளது. வெள்ளோட்ட விவரம் தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அது கூறியுள்ளது.
எச்ஏஎல் நிறுவனத்தின் ஓய்வு பெற்ற தலைமை பைலட் குரூப் கேப்டன் சுப்ரமணியம் விமானத்தை செலுத்திப் பரிசோதித்தார். அரை மணி நேரம் அவர் வானில் வட்டமடித்தார்.
இந்திய விமானப்படைக்கு மொத்தம் 72 பயிற்சி விமானங்களை எச்ஏஎல் தயாரித்துத் தரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முற்றிலும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் இந்த பயிற்சி விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் உள்ள எச்ஏஎல் நிறுவனத்தில் வைத்து இது கட்டப்பட்டுள்ளது.
Hindustan Turbo Trainer (HTT-40) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விமானமானது, இன்று காலை 8.20 மணிக்கு புறப்பட்டு அரை மணி நேரம் வானில் பறந்த பின்னர் பத்திரமாக தரையிறங்கியது. எல்லாம் திட்டமிட்டபடி நடந்ததாகவும், அதன் புள்ளிவிவரங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில்தான் எச்ஏஎல் நிறுவனம் தயாரித்துள்ள இலகு ரக போர் விமானமான தேஜாஸில் பறந்து விமானப்படைத் தலைமைத் தளபதி அரூப் ராஹா பரிசோதனை செய்து பார்த்தார் என்பது நினைவிருக்கலாம்.
எச்டிடி-40 பயிற்சி விமானத் திட்டத்தை சரியான வேகத்தில் செயல்படுத்தி வருகிறது எச்ஏஎல். திட்டமிட்டபடி குறித்த காலத்திற்குள் விமானப்படையிடம் 72 விமானங்களையும் அது கொடுக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. இதற்காக சமீபத்தில்தான் எச்ஏஎல் நிறுவனத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் பாராட்டியிருந்தார்.
இந்த பயிற்சி விமானமானது டர்போ என்ஜினில் இயங்கக் கூடியதாகும். தற்போது இது பயிற்சிக்கான விமானமாக மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதில் ஆயுதங்களைப் பொருத்தக் கூடியவகையில் மாற்றம் செய்யம் திட்டமும் எச்ஏஎல்லிடம் உள்ளதாம்.
முதல் பயிற்சி விமானத்தின் வெள்ளோட்டம் வெற்றிகரமாக அமைந்ததால் சோதனை நடந்த பெங்களூரு எச்ஏஎல் நிறுவனத்தின் விமான ஆய்வு மற்றும் வடிவமைப்பு மையத்தில் ஊழியர்களிடையே உற்சாகம் கரைபுரண்டோடியது.
இந்த பயிற்சி விமான தயாரிப்பு குழுவை எச்ஏஎல் தலைவர் சுவர்ண ராஜுவும் பாராட்டியுள்ளார். இதுகுறித்து ராஜு ஒன்இந்தியாவிடம் கூறுகையில் இது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நாள். இதை சாதித்த இளம் அணியினருக்கு எனது பாராட்டுக்கள், வாழ்த்துகள் என்றார்.