பிரமோஸ் ஏவுகணைகளை சுமந்து செல்லும் வகையில் சுகோய் போர் விமானங்களில் மாற்றம்
-டாக்டர். அனந்தகிருஷ்ணன்
பெங்களூரு: இந்திய விமானப் படையின் மிக முக்கியமான போர் விமானங்களான சுகோய் போர் விமானங்களில் பிரமோஸ் ஏவுகணையை ஏந்திச் செல்லும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
ரஷ்ய தயாரிப்பான இந்த விமானங்களில் இந்திய-ரஷ்ய கூட்டுத் தயாரிப்பான பிரமோஸ் ரக ஏவுகணையையும் ஏந்திச் செல்லும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான முக்கியமான தரை அதிர்வு சோதனை (Ground Vibration Test- GVT) வெற்றிகரமாக செய்து பார்க்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் தொழில்நுட்பத்துடன் இணைந்து ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிட்டெட் (ஹெச்.ஏ.எல் ) தயாரித்துள்ள ஐந்தாம் தலைமுறை போர் விமானம் சுகோய். பல வகையானன ஏவுகணைகளையும் எடுத்துச் சென்று எதிரிகளின் இலக்கில் வீசக் கூடிய வல்லமை மிக்கது இந்த விமானம்.
இதே போல இந்தியாவும் ரஷ்யாவும் கூட்டாக தயாரித்துள்ளது தான் பிரமோஸ் ஏவுகணை. இந்த ஏவுகணைகளை தரையிலிருந்தும், கப்பல்கள்- நீர்மூழ்கிகளில் இருந்தும் ஏவ முடியும்.
இந் நிலையில் இதை போர் விமானங்களிலும், குறிப்பாக, சுகோய் 30 எம்கேஐ ரக விமானங்களிலும் பயன்படுத்தும் வகையில் இப்போது சோதனைகள் தொடங்கியுள்ளன. இந்த சோதனைகள் ஹெச்ஏஎல் நிறுவனத்தின் தர ஆய்வு நிபுணர்கள், இந்திய விமானப்படை அதிகாரிகளின் முன்னிலையில் சுகோய் போர் விமானத்தில் சமீபத்தில் செய்யப்பட்டன.
இதில் முக்கியமானது நில அதிர்வு சோதனை. புனேயில் வைத்து நடந்த இந்த சோதனையை கண்காணிக்க, பெங்களூரில் இருந்து ஹெச்ஏஎல் நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகள் சென்றிருந்தனர். இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளது.
இது குறித்து ஹெச்ஏஎல் நிறுவன தலைவர் ஆர்.கே.தியாகி 'ஒன்இந்தியாவிடம்' கூறுகையில் "சுகோய் போர் விமானத்தை தரம் உயர்த்தும் முயற்சியில் அதிர்வு சோதனை என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். வருங்காலங்களில் பிரம்மோஸ் ஏவுகணையை எடுத்துச் செல்லும் திறனை சுகோய் விமானங்கள் பெறும்.
முதல் கட்ட சோதனைகள் வெற்றிகரமாக முடிந்திருந்தாலும், இன்னும் பல கட்ட சோதனைகளை போர் விமானம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. பல்வேறு ஏஜென்சிகள் இந்த திட்டத்தில் இணைந்துள்ளன. குறிப்பிட்ட இலக்கை உரிய நேரத்தில் அடைந்து விடுவோம் என்று நம்புகிறோம்" என்றார். ஹெச்ஏஎல் சமீபத்தில்தான் நாசிக்கிலுள்ள தனது பிரிவில் சுகோய்-30 வகை விமானங்களை பழுது பார்த்தல் மற்றும் சர்வீஸ் செய்யும் டிவிஷனை திறந்துள்ளது.
உலகிலுள்ள ஒருசில விமான தயாரிப்பு நிறுவனங்கள் மட்டுமே இதுபோன்ற வசதி மையங்களை திறந்துள்ளன, அதில் ஹெச்ஏஎல்லும் ஒன்றாகும். இந்த வசதியை மத்திய பாதுகாப்புதுறை தயாரிப்பு செயலாளர் ஜி.மோகன்குமார் துவக்கி வைத்தார் என்றார்.
தனியார் விமான தயாரிப்பு நிறுவனங்களின் போட்டி குறித்து கேட்டபோது தியாகி தெரிவிக்கையில் "எந்த ஒரு சவாலையும் எதிர்கொள்ள ஹெச்ஏஎல் தயாராக உள்ளது. ஹெச்ஏஎல் குறித்தும் அதன் எதிர்காலம் குறித்தும் நல்லபடியாக தெரிவிக்க பல செய்திகள் எங்களிடமுள்ளன. மாறும் கால சூழ்நிலைக்கு என்ன தேவை என்பதை அறிந்து வைத்துள்ள நிறுவனம்தான் ஹெச்ஏஎல். எங்களின் ஆராய்ச்சி மற்றும் உருவாக்க பிரிவுக்கு கணிசமான முதலீடுகளை தொடர்ந்து அளித்துக் கொண்டே வருகிறோம். பயிற்சி பெற்ற பணியாளர் பலம், எந்த ஒரு வருங்கால தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு உள்ளது" என்றார் நம்பிக்கையாக.
இதனிடையே, விண்கலத்தில் பயணித்த முதல் இந்தியரான ராகேஷ் சர்மா, பெங்களூரில் இந்திய விமானப்படை பயிற்சி கமாண்ட்டில் உரையாற்றினார். அவர் கூறுகையில், "நான் விண்ணில் பயணிப்பேன் என்று ஒருபோதும் கருதவில்லை. இந்திய விமானப்படை அந்த வாய்ப்பை அளித்தது. பிற நாடுகளுடன் இணைந்து, மனிதர்களை சுமந்து செல்லும் விண்கலத்தை சந்திரனுக்கு ஏவ உள்ளது இந்தியா. வருங்காலங்களில் விண்வெளிதான் நமக்கு புதிய வீடாக மாறப்போகிறது. முதலில் நிலாவுக்கும் பிறகு செவ்வாய்க்கும், மனிதர்களுடன் விண்கலங்களை இந்தியா அனுப்ப உள்ளது. மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தாலும் நான் விண்வெளிக்கு பயணம் செய்ய தயாராக உள்ளேன்" என்றார்.