மேம்படுத்தப்பட்ட ஜாக்குவார் விமானத்தின் முதல் பயணம் வெற்றி, வெற்றி: ஹெச்.ஏ.எல்.
பெங்களூர்: ஹெச்.ஏ.எல். நிறுவனம் ஜாக்குவார் டாரின் 3 போர் விமானத்தை முதன்முதலில் பெங்களூரில் வெற்றிகரமாக இயக்கியுள்ளது.
இந்திய விமானப்படைக்கு ஜாக்குவார் நிறுவனத்திடம் இருந்து 59 போர் விமானங்கள் வாங்கப்பட்டன. அந்த விமானங்களின் தாக்கும் திறனை மேம்படுத்த வேண்டும் என்று இந்திய விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து பெங்களூரில் உள்ள ஹெச்.ஏ.எல். நிறுவனம் ஜாக்குவார் ரக விமானங்களின் தாக்கும் திறன், சாப்ட்வேர், ஹார்டுவேர், டிசைன், சிஸ்டம் டிசைன் ஆகியவற்றை மேம்படுத்தியுள்ளது.
முதல்கட்டமாக 3 ஜாக்குவார் ப்ரோட்டோடைப்களில் தாக்கும் திறன் மேம்படுத்தப்பட்டு சோதனைக்காக பயன்படுத்தப்படுகிறது. திறன் மேம்படுத்தப்பட்டுள்ள விமானத்தின் முதல் பயணம் பெங்களூரில் நடைபெற்றது. மேம்படுத்தப்பட்ட விமானத்தின் முதல் பயணம் வெற்றிகரமானதாக அமைந்ததாக ஹெச்.ஏ.எல். நிறுவனம் தெரிவித்துள்ளது.
முதல் முறை 15 நிமிடங்கள் பறந்த ஜாக்குவார் விமானம், இரண்டாவது முறையாக கடந்த 25ம் தேதி சுமார் ஒரு மணிநேரம் பறந்துள்ளது. சோதனைகள் வெற்றிகரமாக நடந்துள்ளது. மேலும் மேம்படுத்தப்பட்ட விமானத்தின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜாக்குவார் விமானத்தின் திறனை மேம்படுத்தும் பணியில் பெங்களூர் தவிர ஹைதராபாத் மற்றும் கோர்வாவில் உள்ள ஹெச்.ஏ.எல். கிளைகளின் பங்கும் உள்ளது.