ருத்ரா ஹெலிகாப்டர், தேஜா போர் விமானம்... பெங்களூரு கண்காட்சிக்கு தயாராகிறது ஹெச்.ஏ.எல்.!
பெங்களூரு: ஆசியாவிலேயே மிகப் பெரிய விமான கண்காட்சிக்கு மத்திய அரசுக்குச் சொந்தமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட் தயாராகிக் கொண்டிருக்கிறது. இக்கண்காட்சியில் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனம் தமது இலகு ரக ஹெலிகாப்டர் ருத்ரா, தேஜா விமானம் உள்ளிட்டவற்றை காட்சிக்கு வைக்க இருக்கிறது.
பெங்களூருவில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் விமான கண்காட்சி ஆசியாவிலேயே மிகப்பெரியதாகும். இந்த ஆண்டு 10-வது சர்வதேச விமான கண்காட்சி பெங்களூருவில் உள்ள யெலகன்கா ஏர் போர்ஸ் ஸ்டேஷனில் வரும் 18-ந் தேதி தொடங்குகிறது. 5 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.
இக் கண்காட்சியில் விமானம் தயாரிக்கும் 328 வெளிநாட்டு கம்பெனிகள், 295 இந்திய கம்பெனிகள் கலந்து கொள்கின்றன. பிரான்ஸை சேர்ந்த பிரபல விமான தயாரிப்பு நிறுவனமான டாஸால்ட்டுடன் 126 விலை மதிப்பு மிக்க ரேபல் பைட்டர் பிளேன்களை வாங்கும் திட்டமும் கையெழுத்தாகிறது.
காங்கிரஸ் ஆட்சியில் ஹெலிகாப்டர் ஊழலில் சிக்கிய பின்மெக்கானிக்கா நிறுவனமும் இதில் கலந்து கொள்கிறது. இந்த ஏரோ ஷோவில் பிரதமர் மோடி ரபேல் பைட்டர் விமானத்தை இயக்க இருக்கிறார்.
இக் கண்காட்சியில் பிப்.16-ந் தேதிமுதல் 18-ந் தேதி வரை விமானத் தொழில்துறை தொடர்பான பன்னாட்டு விமானத்தொழில் கருத்தரங்கமும் நடைபெற உள்ளது.
உலகின் தலைசிறந்த 75 விமானத் தொழில்துறை வல்லுநர்கள் கருத்தரங்கில்பேசவிருக்கிறார்கள். கண்காட்சி மற்றும் கருத்தரங்குகளில் வெளிநாடுகளை சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.
இக்கண்காட்சி குறித்து மத்திய அரசுக்கு சொந்தமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் டி. ஸ்வர்ன ராஜூ ஒன் இந்தியாவிடம் கூறியதாவது:
75 ஆண்டுகாலமாக விமானத் துறையில் நாம் சாதித்திருப்பதை இந்த கண்காட்சியில் வெளிப்படுத்த இருக்கிறோம். இந்த கண்காட்சியில் மத்திய அரசின் 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் அடிப்படையில் விமானம் மற்றும் பாதுகாப்புத் துறைக்கான ஒப்பந்தங்கள் அதிக அளவில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கிறோம்.
இந்தியாவிலேயே முழுவதும் தயாரிக்கப்பட்ட அதிநவீன இலகுரக ஹெலிகாப்டர் ருத்ரா, நமது சொந்த தயாரிப்பான தேஜா போர் விமானம் போன்றவை நமது திறமையை பறைசாற்றுகிற தூதர்களாக இருக்கும்.
ஒற்றை என்ஜினில் இயங்கக் கூடிய கண்காணிப்பு, மெடிக்கல் ஆம்புலன்ஸ் என பல்வேறு பயன்பாட்டுக்குரிய மிக இலகு ரக ஹெலிகாப்டரும் இக்கண்காட்சியில் இடம்பெற இருக்கிறது. இக்கண்காட்சியில் வான்வெளியில் நமது சாதனை வெளிப்படும்.
இவ்வாறு ஸ்வர்ண ராஜூ கூறினார்.