அகிலேஷ் யாதவ் அமைச்சர்களில் பாதி பேர் பணத்திலேயே குறியாக இருக்கிறார்கள்: முலாயம் தாக்கு
லக்னோ: உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவின் சட்டசபையில் உள்ள அமைச்சர்களில் பாதி பேர் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக உள்ளனர் என்று சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பீகார் முதல்வர் கற்பூரி தாகூரின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில் ஆளும் சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,
பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருக்காதீர்கள் என்று அகிலேஷ் யாதவ் சட்டசபையில் உள்ள அமைச்சர்களுக்கு நான் அறிவுரை வழங்கினேன். பாதி பேர் என் பேச்சை கேட்டு திருந்திவிட்டனர். ஆனால் மீதமுள்ள பாதி பேர் இன்னும் பணம் சம்பாதிப்பதில் தான் குறியாக உள்ளனர்.
பணம் தான் முக்கியம் என்றால் நீங்கள் வியாபாரம் செய்திருக்க வேண்டும். நான் கூட உங்களுக்கு உதவியிருப்பேன். அரசியலில் மக்கள் தானாக வந்து பணம் தருவார்கள்.
இங்கே அமர்ந்திருக்கும் சபாநாயகர் மாதா பிரசாத் பாண்டே பெட்ஷீட் விரித்து மக்களிடம் பணம் வசூலித்திருக்கிறார். மக்கள் லட்சம், லட்சமாக அவருக்கு கொடுத்துள்ளனர். நான் கூடத் தான் அவரைப் போன்று பணம் வாங்கியுள்ளேன். அதை எண்ணவே நான்கு நாட்கள் ஆனது என்றார்.