குளிர்கால கூட்டத்தொடர்: தொடர் அமளியால் 55 மணிநேரம் வீணடிப்பு; அரசுக்கு ரூ.10 கோடி இழப்பு !
டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது எதிர்கட்சிகளின் தொடர் அமளியால் 55 மணிநேரம் அவை நடவடிக்கைகள் வீணடிக்கப்பட்டது. இதனால் அரசுக்கு 10 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் நவம்பர் 26 ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத் தொடரில் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த மசோதா இந்த முறையும் நிறைவேற்றப்படவில்லை.
சகிப்பின்மை விவகாரம், நேஷனல் ஹெரால்டு வழக்கு, அயோத்தி சர்ச்சை, டெல்லி கிரிக்கெட் சங்க ஊழல் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் காரணமாக மக்களவையில் கூச்சல் குழப்பம் நிழவியது. தொடர் அமளியால் அவை நடவடிக்கைகள் பெரும்பாலான நேரங்களில் பாதிக்கப்பட்டன.
இதனிடையே எதிர்கட்சிகளின் கடும் அமளிகளுக்கு இடையே மக்களவையில் போனஸ் சட்டதிருத்தம் உள்ளிட்ட 14 முக்கிய மசோதாக்கள் மட்டுமே நிறைவேற்றப்பட்டன. முன்னதாக மக்களவை 114 மணி நேரம் செயல்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் ஒருமணிநேரம் கூடுதலாக 115 மணிநேரம் செயல்பட்டுள்ளது. இந்நிலையில் மக்களவை தேதி குறிப்பிடபடாமல் இன்று ஒத்திவைக்கப்பட்டது.
அதேசமயம் மாநிலங்களவையில் சிறார் குற்றவாளிகளின் வயது வரம்பை 16 ஆக குறைப்பது உள்ளிட்ட 9 மசோதாக்கள் மட்டும் நிறைவேற்றப்பட்டன. மாநிலங்களவை 112 மணி நேரம் செயல்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் எதிர்கட்சிகளின் தொடர் அமளியால் 55 மணிநேரம் வீண் அடிக்கப்பட்டுவிட்டதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் ஒரு நிமிடம் அவையை நடத்த ரூ.29 ஆயிரம் செலவாகிறது. அந்த வகையில், இந்த கூட்டத்தொடரில் பெரும்பாலான நேரம் வீணடிக்கப்பட்டதால், அரசுக்கு ரூ.9.9 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.