உட்கார்ந்தே வேலை பார்ப்பவர்களுக்கு ஏன் உடல் எடை அதிகரிக்கிறது?
பெங்களூர்: கெரியர் பில்டர் இந்தியா நிறுவனம் நடத்திய கணக்கெடுப்பில் அலுவலகங்களில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பவர்களில் 52 சதவீதம் பேர் தற்போதைய வேலையில் சேர்ந்த பிறகு தங்களின் உடல் எடை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கெரியர் பில்டர் இந்தியா நிறுவனம் அலுவலகங்களில் அமர்ந்து வேலை பார்க்கும் நபர்களிடையே உடல் எடை பற்றி கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது. ஆன்லைனில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர். கருத்துக்கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 52 சதவீதம் பேர் தங்களின் தற்போதைய அலுவலகத்தில் சேர்ந்த பிறகு தங்களின் உடல் எடை அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
அதில் 31 சதவீதம் பேர் 2.5 கிலோவுக்கு மேல் எடை அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளனர். தற்போதைய அலுவலகத்தில் சேர்ந்த பிறகு உடல் எடை குறைந்ததாக 11 சதவீத ஊழியர்கள் மட்டுமே தெரிவித்துள்ளனர்.
மன அழுத்தம்
வேலைப் பளு, தூக்கமின்மை ஆகியவை ஊழியர்களின் உணவு பழக்க வழக்கங்கள், உடற்பயிற்சி முறையை தீர்மானிக்கின்றன என்று கெரியர் பில்டர் இந்தியா நிறுவன தலைவர் பிரேம்லேஷ் மசாமா தெரிவித்துள்ளார். உடல்நலத்தை பேணவில்லை என்றால் அது மனநலத்தை பாதிப்பதுடன் வேலையின் தரத்தையும் பாதிக்கிறது. அதனால் வேலைக்கு இடையே அவ்வப்போது இருக்கையில் இருந்து எழுந்து நடப்பது நல்லது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
உடல் எடை அதிகரிப்பு ஏன்?
அலுவலகத்திற்குள் நுழைந்துவிட்டால் பெரும்பாலான நேரம் உட்கராந்த இடத்திலேயே அப்படியே உள்ளோம். அதனால் தான் உடல் எடை அதிகரிக்கிறது என்று 60 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். உடற்பயிற்சி செய்ய தெம்பு இல்லை என 36 சதவீதம் பேரும், உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லை என 37 சதவீதம் பேரும், வேலைப்பளுவால் அதிகம் சாப்பிடுவதாக 24 சதவீதம் பேரும், நேரம் இல்லாததால் உணவை தவிர்ப்பதாக 28 சதவீதம் பேரும், தினமும் வெளியே சாப்பிடுவதால் எடை அதிகரிப்பதாக 33 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.
உடற்பயிற்சி
ஜிம்களுக்கான பாஸ் உள்ளிட்ட சலுகைகளை அலுவலகத்தில் அளிப்பது இல்லை என 53 சதவீத ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். அலுவலகத்தில் இருக்கையில் நொறுக்குத் தீனியை சாப்பிடுவதாக 81 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். 37 சதவீதம் பேர் வாரத்தில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட முறை ஹோட்டல்களில் சாப்பிடுகிறார்கள்.
பெண்கள்
உடல் எடை அதிகரித்துள்ளதாக ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் உணர்கிறார்கள். வாரத்தில் ஒருமுறையாவது ஒர்க்அவுட் செய்வதாக 81 சதவீதம் ஆண்களும், 79 சதவீதம் பெண்களும் தெரிவித்துள்ளனர்.
டிப்ஸ்
என்ன வேலையாக இருந்தாலும் உடற்பயிற்சி செய்ய நேரம் ஒதுக்க வேண்டும். அலுவலகத்தில் லிப்ட்டுக்கு பதில் படிக்கட்டை பயன்படுத்தவும். உட்கார்ந்த இடத்திலேயே அப்படியே இருக்க வேண்டாம். அவ்வப்போது எழுந்து பக்கத்து இருக்கை வரையிலாவது நடந்து செல்லவும். நிறைய தண்ணீர் குடிக்கவும், குளிர்பானங்களை முடிந்த வரை தவிர்க்கவும், ஹோட்டல்களில் சாப்பிடுவதை குறைத்துக் கொள்ளவும். நொறுக்குத் தீனிக்கு பதில் சத்தான பாதாம், கேரட் போன்றவற்றை சாப்பிடலாம்.