இஸ்ரேல் தாக்குதல்: ராஜ்யசபாவில் விவாதம் நடைபெறும்- அன்சாரி அறிவிப்பு! சுஷ்மா முயற்சி தோல்வி!!
டெல்லி: பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலை குறித்து ராஜ்யசபாவில் விவாதிக்க கூடாது என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் விடுத்த கோரிக்கையை சபாநாயகர் ஹமீத் அன்சாரி நிராகரித்துவிட்டார்.
பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் அட்டூழிய தாக்குதலை நடத்தி வருகிறது. இத்தாக்குதலில் 200க்கும் அதிகமான அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர்.
இஸ்ரேல் நிகழ்த்தி வரும் இனப்படுகொலையை நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுமே கண்டித்து வருகின்றன. இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.
ராஜ்யசபாவில் விவாதம்
அனைத்து கட்சி உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று ராஜ்யசபாவில் இஸ்ரேல்- காஸா விவகாரம் குறித்து நேற்று விவாதம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இஸ்ரேலின் இனப்படுகொலை குறித்து விவாதித்தால் இலங்கை இனப்படுகொலை குறித்தும் விவாதிக்க நேரிடும் என்பதால் அதைத் தடுக்க மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தீவிர முயற்சிகளை மேற்கொண்டார்.
தடுத்து நிறுத்திய சுஷ்மா
விவாதம் நடைபெற இருந்த நேரத்தில் ராஜ்யசபாவில் பேசிய சுஷ்மா ஸ்வராஜ், இது பற்றி விவாதித்தால் இருநாட்டு உறவு பாதிக்கும். என் கவனத்துக்கு கொண்டுவராமல் விவாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவாதத்தைக் கைவிட வேண்டும் என்று சபாநாயகர் அன்சாரிக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். அவர் என்ன முடிவெடுத்தாலும் ஏற்கிறேன் என்றார். இதற்கு அனைத்து எதிர்க்கட்சி எம்.பி.க்களும் கண்டனம் தெரிவிக்க, ராஜ்யசபா நேற்று முடங்கியது.
சுஷ்மா கோரிக்கை நிராகரிப்பு
இந்நிலையில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் விடுத்த கோரிக்கையை நிராகரிப்பதாகவும் ராஜ்யசபாவில் இஸ்ரேல் - காஸா விவகாரம் குறித்து விவாதம் நடத்தப்படும் என்றும் சபாநாயகர் அன்சாரி இன்று ராஜ்யசபாவில் அறிவித்தார்.
உடனே விவாதம் நடத்த கோரிக்கை
ஆனால் இந்த விவாதத்தை உடனே நடத்த வேண்டும் என்று எம்.பிக்கள் வலியுறுத்தியனர். அப்போது அன்சாரிக்கும் காங்கிரஸ் கட்சியின் ஆனந்த் சர்மாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
தொடர் அமளி
மேலும் மார்க்சிஸ்ட், ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளின் எம்.பி.க்களும் பாலஸ்தீன மக்கள் படுகொலை செய்யபப்டுவது ஒரு மனிதாபிமான பிரச்சனை.. அதைத்தான் முதலில் விவாதிக்க வேண்டும்.. ரயில்வே பட்ஜெட் மீதான விவாதத்தை பின்னர் நடத்தலாம் என்று கூறினர். இதனால் ராஜ்யசபாவில் கடும் அமளி நீடித்து சபை நடவடிக்கைகள் முடங்கின.