சவுதியில் தமிழக பெண்ணின் கை வெட்டப்பட்ட சம்பவம்.. சுஷ்மா கடும் கண்டனம்
டெல்லி: சவுதியில் வீட்டு வேலைக்காகச் சென்ற தமிழகப்பெண்ணின் கை வெட்டப்பட்ட சம்பவம் ஏற்றுக் கொள்ள முடியாதது என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் மூங்கிலேறி கிராமத்தை சேர்ந்த கஸ்தூரி முனிரத்தினம் (55), கடந்த 3 மாதங்களுக்கு முன் வீட்டு வேலைக்காக சவுதி அரேபியாவுக்கு சென்றார். அங்கு உள்ளூர் அதிகாரிகள் வெளிநாட்டு ஊழியர்களின் நிலை குறித்து வீடுவீடாக சென்று ஆய்வு நடத்தியபோது, தனது முதலாளி தன்னை சித்ரவதை செய்வதாக அவர்களிடம் கஸ்தூரி முறையிட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த முதலாளி, கஸ்தூரியின் வலதுகையை வெட்டியுள்ளார். தற்போது ஆபத்தான நிலையில் கஸ்தூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கஸ்தூரியின் உறவினர்கள் அவரை தமிழகத்திற்கு மீட்டுக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக கனிமொழி எம்.பி.யும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜூக்கு கடிதம் எழுதியுள்ளார்.
Chopping of hand of Indian lady - We are very much disturbed over the brutal manner in which Indian lady has been treated in Saudi Arabia.
— Sushma Swaraj (@SushmaSwaraj) October 9, 2015
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சுஷ்மா சுவராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார். அதில் அவர், ‘சவுதியில் வீட்டு வேலைக்காகச் சென்ற தமிழக பெண்ணின் கை வெட்டப்பட்ட சம்பவம் ஏற்றுக் கொள்ள முடியாதது. இது தொடர்பாக சவுதி அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளோம்' எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்த சம்பவத்திற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும் தனது கடும் கண்டனங்களைத் தெரிவித்திருந்தது.
இது குறித்து வெளியுறவு துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘ரியாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் இந்த சம்பவம் குறித்து சவுதி வெளியுறவு அலுவலகம் மூலம் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக பெண்ணின் கையை வெட்டியவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யவும், கடும் தண்டனை அளிக்கவும் இந்தியா வலியுறுத்தி உள்ளது' என்றார்.