ஸாரிங்க... கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்கள் இன்று முதல் செல்லாது!
டெல்லி: மத்திய அரசு வழங்கிய திருத்திக் கொள்வதற்கான கால அவகாசம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, இனி கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டுகளைப் பயன்படுத்த முடியாது.
கடந்த 1995, 1996-ம் ஆண்டுகளில் ‘பாஸ்போர்ட்' கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டுகள் விநியோகிக்கப்பட்டது.
இந்நிலையில், அனைத்து நாட்டு விமான நிலையங்களிலும் இனி வரும் ஆண்டுகளில் எந்திரங்களே சரிபார்க்கும் பாஸ்போர்ட்டு வைத்திருப்பவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அகில உலக விமான அமைப்பு (ஐ.சி.ஏ.ஓ.) முடிவு செய்தது.
எனவே, கையால் எழுதிய பாஸ்போர்ட்டுகளை திருத்திக் கொள்ள உத்தரவிடப்பட்டது. இதற்கு இம்மாதம் 24ம் தேதி வரை கால அவகாசமும் அளிக்கப்பட்டது.
இதனைப் பயன்படுத்திக் கொண்டு, கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டுகளை வைத்திருப்போர், அதனை வழங்கி விட்டு, புதிய பாஸ்போர்ட்டுகளைப் பெற்றுக் கொள்ளுமாறு வெளியுறவுத் துறை அறிவுறுத்தியிருந்தது.
இந்நிலையில், மத்திய அரசு வழங்கியிருந்த கால அவகாசம் நேற்று முன்தினத்தோடு முடிவடைந்தது. எனவே, இனி கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டுகளை யாரும் பயன்படுத்த முடியாது.