பனியில் இருந்து மீட்கப்பட்ட வீரருக்கு நிமோனியா, கிட்னி, கல்லீரல் பிரச்சனைகள்
டெல்லி: சியாச்சின் போர் முனையில் இருந்து மீட்கப்பட்ட வீரர் ஹனுமந்தப்பாவுக்கு நிமோனியா இருப்பதாகவும், அவரின் சிறுநீரகங்கள், கல்லீரல் சரியாக வேலை செய்யவில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் சியாச்சின் போர் முனையில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 25 அடி ஆழ பனியில் 6 நாட்களாக இருந்த வீரர் ஹனுமந்தப்பா உயிருடன் மீட்கப்பட்டார். டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.
கோமாவில் இருக்கும் அவரின் நிலைமை பற்றி அடுத்த 24 மணிநேரத்திற்கு எதுவும் கூற முடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஹனுமந்தப்பாவுக்கு நிமோனியா ஏற்பட்டுள்ளது.
மேலும் அவரின் சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் சரியாக வேலை செய்யாமல் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ள அவர் குணமடைய மக்கள் சிறப்பு பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.
6 நாட்கள் பனியுடன் போராடிய அவர் இந்த உயிர் போராட்டத்திலும் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கையோடு உள்ளனர் அவரது குடும்பத்தார்.