கிரிக்கெட் வீரர்களை நாளை ராஜ்கோட் ஸ்டேடியத்தில் முற்றுகை- ஹர்திக் மிரட்டல்; 144 தடை உத்தரவு அமல்!!
ராஜ்கோட்: இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையேயான நாளைய 3 வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாட வரும் இரு அணிவீரர்களையும் ராஜ்கோட் மைதானத்தில் முற்றுகையிட்டுத் தடுப்போம் என படேல் சமூகத் தலைவர் ஹர்திக் படேல் மிரட்டல் விடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து ராஜ்கோட் மைதானத்தில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலைவுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் படேல் சமூகத்தினர் தங்களுக்கு கல்வி,வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு 22 வயது ஹர்திக் படேல் தலைமை வகிக்கிறார்.
தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியா- தென்னாப்பிரிக்கா இடையேயான 3 வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெறும் ராஜ்கோட் மைதானத்தை நாளை ஆக்கிரமித்து அமைதிவழியில் போராட்டம் நடத்துவோம் என ஹர்திக் படேல் அறிவித்திருந்தார். இந்த நிலையில் தங்களது சமூகத்தினருக்கு கிரிக்கெட் போட்டிகளை பார்ப்பதற்கு டிக்கெட்டுகள் வழங்கப்படவில்லை என ஹர்திக் படேல் குற்றம்சாட்டியுள்ளார்.
இதனால் இரு அணி வீரர்களையும் போட்டி நாளன்று ராஜ்கோட் மைதானத்துக்குள் விளையாட விடாமல் தடுக்கப் போவதாகவும் அவர் மிரட்டல் விடுத்துள்ளார். இரு அணிவீரர்களும் ஏற்கனவே ராஜ்கோட் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ராஜ்கோட் மைதான கண்காணிப்பில் 3 ஆளில்லா கண்காணிப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. 90 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மைதானத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் ராஜ்கோட்டில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
144 தடை உத்தரவு
இதனிடையே ராஜ்கோட் மைதானத்தில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் 144 தடை உத்தரவை மாவட்ட நிர்வாகம் இன்று இரவு பிறப்பித்துள்ளது. மேலும் ராஜ்கோட் மைதானத்தை சுற்றிய பகுதியில் இணையதள சேவையும் தடை செய்யப்பட்டுள்ளது.