போலீசாரை கொலை செய்ய தூண்டும் பேச்சு.... ஹர்திக் படேல் மீது பாய்ந்தது தேச துரோக வழக்கு
அகமதாபாத்: போலீசாரை படுகொலை செய்யுங்கள் என பேசிய குஜராத் படேல் சமூகத் தலைவர் ஹர்திக் படேல் மீது இன்று தேச துரோக வழக்கு பாய்ந்துள்ளது.
குஜராத்தில் முற்பட்ட வகுப்பினராகிய படேல் சமூகத்தினரை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து இடஒதுக்கீடு வழங்க வேண்டும்; இல்லை எனில் இடஒதுக்கீடு முறையையே ஒழித்துகட்ட வேண்டும் என்ற முழக்கத்தை முன்வைத்து வருகிறவர் ஹர்திக் படேல்.
கடந்த சில மாதங்களாக ஹர்திக் படேல் தமது போராட்டத்தை தீவிரமாக நடத்தி வருகிறார். இதனால் படேல் சமூக போராட்டக் குழுவைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.
இக்கைது நடவடிக்கையை கண்டித்து அக்டோபர் 3-ந் தேதியன்று படேல் சமூகத்தினரிடம் பேசிய ஹர்திக், இடஒதுக்கீடு கோரிக்கைக்காக எவரும் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம்; நீங்கள் உயிரை மாய்த்துக் கொள்வதற்கு பதிலாக ஒடுக்குமுறையை ஏவிவிடும் போலீசாரை படுகொலை செய்யுங்கள் என்று பேசியிருந்தார்.
ஹர்திக் படேலின் இப்பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் ராஜ்கோட்டில் இந்தியா- தென்னாப்பிரிக்கா இடையேயான 3வது ஒருநாள் போட்டியை நேற்று தடுக்கும் வகையில் ஹர்திக் படேல் பேரணியாக செல்ல முயன்றார்.
ஆனால் அவரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். முன்னதாக கைது நடவடிக்கையில் இருந்து தப்பி செய்தியாளர்களிடம் ஹர்திக் பேச முயற்சித்தார். அப்போது தேசியக் கொடியை காலில் போட்டு மிதித்தபடி ஹர்திக் நின்று கொண்டிருந்தார். இதனால் தேசியக் கொடியை அவமதித்ததாகவும் ஒரு வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் "போலீசாரை படுகொலை செய்ய வேண்டும்" என்ற பேச்சுக்காக இன்று தேசத்துரோக வழக்கும் ஹர்திக் படேல் மீது பாய்ந்துள்ளது. இதனால் ஹர்திக் படேல் அவ்வளவு எளிதாக வெளியே வந்துவிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.