இந்தியா-தெ. ஆ 3வது ஒரு நாள் போட்டி... அசம்பாவிதத்தைத் தடுக்க ஹர்திக் பட்டேல் கைது
ராஜ்கோட்: இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையேயான மூன்றாவது ஒரு நாள் போட்டி எந்த அசம்பாவிதமும் இல்லாமல் நடக்க போலீசார் பட்டேல் சமூகத் தலைவர் ஹர்திக் பட்டேலை கைது செய்துள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் பட்டேல் சமூகத்தினரை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக் கோரி பட்டேல் சமூக தலைவர் ஹர்திக் பட்டேல் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார். இந்நிலையில் இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையேயான மூன்றாவது ஒரு நாள் போட்டி இன்று குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட்டில் நடந்து வருகிறது.
பட்டேல் சமூக போராட்டத்திற்கு சர்வதேச அளவில் கவனத்தை ஈர்க்க ராஜ்கோட் மைதானத்திற்கு வந்து இரு அணி வீரர்களையும் முற்றுகையிடப் போவதாக ஹர்திக் பட்டேல் அறிவித்திருந்தார். இதையடுத்து மைதானத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இந்நிலையில் அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் ஹர்திக் பட்டேலை கைது செய்துள்ளனர். ஹர்திக் பட்டேல் ஸ்டேடியத்திற்கு 5 கிலோமீட்டர் தொலைவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கிடையே இன்றைய போட்டி சுமூகமாக நடக்க நேற்று இரவு இன்டர்நெட் சேவை நிறுத்தி வைக்கப்பட்டது என்று மாவட்ட கலெக்டர் மனிஷா சந்திரா தெரிவித்தார்.
பாஜகவினர் ஸ்டேடியத்தில் கலாட்டா செய்து பழியை பட்டேல் சமூகத்தினர் மீது போடப்போவதாக தகவல் கிடைத்துள்ளது என்று ஹர்திக் பட்டேலின் உதவியாளர் தினேஷ் பட்டேல் தெரிவித்துள்ளார்.