தடையை மீறி இடஒதுக்கீடு யாத்திரை-சூரத்தில் ஹர்திக் படேல் கைது- இண்டர்நெட் 'கட்'- உச்சகட்ட பதற்றம்!
சூரத்: படேல் சமூகத்துக்கு இடஒதுக்கீடு கோரி தடையை மீறி சூரத்தில் யாத்திரை செல்ல முயற்சித்ததாக ஹர்திக் படேல் உட்பட 78 பேரை குஜராத் போலீசார் கைது செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மாநிலத்தில் வன்முறை வெடிக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 24 மணிநேரத்துக்கு இணைய இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
குஜராத்தில் முற்பட்ட வகுப்பினர் பட்டியலில் உள்ள படேல் சமூகத்தினரை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஹர்திக் படேல் தலைமையில் அந்த சமூகம் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளது.
அண்மையில் அகமதாபாத்தில் பல லட்சம் பேரை திரட்டி நாட்டையே ஹர்திக் படேல் திரும்பிப் பார்க்க வைத்தார். அப்போது அவர் சில மணிநேரம் கைது செய்யப்பட்டிருந்தார். இதைக் கண்டித்து ஒட்டுமொத்த குஜராத் பற்றி எரிந்தது.
பின்னர் ஹர்திக் படேலின் யாத்திரைகள், பேரணிகளுக்கு குஜராத் அரசு தொடர்ச்சியாக தடை விதித்து வருகிறது. இந்த நிலையில் இன்று சூரத்தில் இடஒதுக்கீடு கோரும் பேரணியை நடத்த ஹர்திக் திட்டமிட்டிருந்தார்.
ஆனால் குஜராத் மாநில அரசு நேற்று இந்த பேரணிக்கு தடை விதித்தது. இருப்பினும் இன்று சூரத்தில் தடையை மீறி யாத்திரை நடத்த முயற்சித்ததால் ஹர்திக் படேல் உட்பட 78 பேர் கைது செய்யப்பட்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஹர்திக், குஜராத் மாநில அரசும் போலீசும் இம்மாநிலத்தில் ஒரு அசாதாரண சூழ்நிலையை உருவாக்க நினைக்கின்றன என்று எச்சரித்தார் ஹர்திக்.
ஹர்திக் படேல் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து மாநிலத்தில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க பெரும்பாலான இடங்களில் இணைய இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. சமூக வலைதளங்கள், மெசஞ்சர்கள் மூலமாக ஹர்திக் படேல் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபடலாம் என்பதால் அம்மாநில அரசு இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.