9 மாத சிறைவாசத்துக்குப் பின் ஹர்திக் படேல் விடுதலை- "ராயல்" வரவேற்பு
சூரத்: இடஒதுக்கீடு கோரி போராடியதால் சிறையிலடைக்கப்பட்ட படேல் சமூகத் தலைவர் ஹர்திக் படேல் இன்று சூரத் சிறையில் இருந்து விடுதலையானார். சிறைவாசலில் அவருக்கு நூற்றுக்கணக்கான படேல் போராட்டக் குழுவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
குஜராத்தில் கடந்த ஆண்டு படேல் சமூகத்தினரை இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்த்து இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் அல்லது இடஒதுக்கீட்டு முறையை ரத்து செய்ய வேண்டும் என்ற போராட்டத்தைத் தொடங்கியவர் ஹர்திக் படேல். இந்தப் போராட்டம் மிகப் பெரிய அளவு வன்முறையாக வெடித்தது.
குஜராத்தில் ஆளும் பாஜக அரசுக்கு மிகப் பெரிய நெருக்கடியும் இதனால் உருவானது. இதனையடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹர்திக் படேல் கைது செய்யப்பட்டார்.
அவர் மீது 2 தேசத் துரோக வழக்குகள் தொடுக்கப்பட்டன. கடந்த 9 மாதமாக சிறைவாசம் அனுபவித்த ஹர்திக் படேலுக்கு அண்மையில் அம்மாநில உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் அளித்தது.
ஜூலை 17-ந் தேதி முதல் 6 மாத காலம் குஜராத்தை விட்டு வெளியே தங்கி இருக்க வேண்டும் என்பது ஹர்திக் படேலுக்கு விதிக்கப்பட்ட ஜாமீன் நிபந்தனை.
இதைத் தொடர்ந்து இன்று சூரத் லஜ்பூர் சிறையில் இருந்து ஹர்திக் படேல் விடுதலை செய்யப்பட்டார். சிறைவாசலில் நூற்றுக்கணக்கான படேல் போராட்டக் குழுவினர் ஒன்று திரண்டு அவருக்கு சிறப்பான வரவேற்பளித்தனர்.