ஹர்திக் பட்டேலின் 2 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தம்: அகமதாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு
ஹர்திக் பட்டேலின் சிறை தண்டனை நிறுத்தம் என்று அகமதாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அகமதாபாத்: குஜராத்தில் பட்டேல் சாதியினருக்கு இடஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்திய ஹர்த்திக் பட்டேலுக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து அகமதாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குஜராத்தில் பெரும்பான்மையாக வசிக்கும் பட்டேல் சாதியினர் தங்களுக்கு அரசு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்திவருகின்றனர்.
கடந்த 2015 ஆம் ஆண்டில் பட்டேல் சமூக தலைவரான ஹர்த்திக் பட்டேல் தலைமையில் பட்டேல் சாதியினருக்கு இடஒதுக்கீடு வழங்கக் கோரி நடைபெற்ற போராட்டத்தில் குஜராத் மாநிலமே ஸதம்பித்தது. போராட்டத்தின்போது விஸ்நகர் பகுதியில் வன்முறை வெடித்தது.
இது தொடர்பாக ஹர்திக் பட்டேல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றுவந்தது. இந்த வழக்கில் கடந்த ஜூலை 25 ஆம் தேதி ஹர்திக் பட்டேலுக்கு விசாரணை நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, அகமதாபாத் உயர் நீதிமன்றத்தில் ஹர்திக் பட்டேல் மேல்முறையீடு செய்தார். இந்த மேல் முறையீட்டு மனு நீதிபதி வோரா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி வோரா, ஹர்திக் மீதான் 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைப்பதாகவும், விசாரணை முடியும் வரை போலீஸில் சரணடையத் தேவையில்லை என்று உத்தரவிட்டார்.