காங்கிரஸை ஆதரித்து குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பிரசாரம் ... ஹர்திக் படேலின் தந்தை
அகமதாபாத்: குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை ஆதரித்து தீவிரப் பிரசாரம் செய்யப் போவதாக ஹர்திக் படேலின் தந்தை பரத் படேல் கூறியுள்ளார்.
தான் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த படேல் சமுதாயமும் காங்கிரஸுக்கு ஆதரவாக செயல்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
குஜராத்தில் படேல் இனத்தவருக்கு இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி ஹர்திக் படேல் தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. பெரும் வன்முறைக் களமாக இந்தப் போராட்டம் மாறியது. தற்போது தேசிய கொடியை அவமதித்ததாக ஹர்திக் படேல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையி் அவரது தந்தை பரத் படேல் காங்கிரஸை ஆதரித்து செயல்படப் போவதாக அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சபர்கந்தா மாவட்டத்தில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொண்டு பரத் படேல் பேசுகையில் எனது மகனுக்கும், படேல் சமுதாயத்திற்கும் இந்த பாஜக அரசும், காவல்துறையும் அநீதி இழைத்து விட்டன. கொடுமைப்படுத்தி வருகின்றன.
எனவே நான் காங்கிரஸுக்கு ஆதரவாக செயல்படுவேன். எனது சமுதாயமும் காங்கிரஸ் பின்னால் நிற்கும். உள்ளாட்சித் தேர்தலில் நாங்கள் காங்கிரஸை தீவிரமாக ஆதரித்து செயல்படுவோம் என்றார் பரத் படேல்.
மேலும் அவர் கூறுகையில், படேல் சமுதாயம் ஹர்திக் படேல் பின்னால் நிற்கிறது. இதை வரும் தேர்தலில் நாங்கள் நிரூபித்துக் காட்டுவோம் என்று அவர் கூறினார்.
குஜராத்தில் வருகிற 22ம் தேதி 6 மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடக்கிறது. பின்னர் 29ம் தேதி, 31 மாவட்ட பஞ்சாயத்து, 230 தாலுகா பஞ்சாயத்து, 56 நகராட்சிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.