காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கும் ஹர்திக் பட்டேல்.. உடல்நிலை மோசமாவதால் குஜராத் அரசு கவலை
காந்திநகர்: காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கும் பட்டிடார் அனாமத் அந்தோலன் சமிதி அமைப்பின் தலைவர் ஹர்திக் பட்டேல் உடல்நிலை மோசமாகியுள்ளதாகவும், அவர் டாக்டர்கள் அறிவுரையை ஏற்க வேண்டும் என்றும், குஜராத் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
குஜராத் மாநிலத்தில் பட்டேல் சிறுபான்மை இனத்தவருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உரிய இட ஒதுக்கீடு கோரி ஹர்திக் பட்டேல் கடந்த 2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மிகப்பெரிய போராட்டத்தை தொடங்கினார். போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட வன்முறையில் 14 பேர் உயிரிழந்தனர்.
அந்த போராட்டத்தின் மூன்றாம் ஆண்டு நினைவுநாளையொட்டி ஆகஸ்ட் 25ம் தேதி முதல் அகமதாபாத் நகரில் உள்ள தனது பண்ணை வீட்டு வளாகத்தில் ஹர்திக் பட்டேல் உண்ணா விரதத்தை துவக்கினார்.
மக்கள் ஆதரவு
11வது நாளாக ஹர்திக் பட்டேல் உண்ணாவிரதம் இருந்து வரும் நிலையில், அவருக்கு, மாநிலம் முழுக்க ஆதரவு பெருகி வருகிறது. இதனால் அரசுக்கு எதிராக மக்கள் கொந்தளிக்க கூடும் என குஜராத் அரசு அச்சப்படுகிறது. மாநில மின்சாரத்துறை அமைச்சர் சுரப் பட்டேல் இன்று அளித்த பேட்டியில், ஹர்திக் பட்டேல் உடல்நிலை குறித்து அரசு கவலைப்படுகிறது. அதேநேரம், காங்கிரசின் தூண்டுதலால் நடைபெறும் போராட்டம் என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்தில்லை.
அரசு உதவி
முழு உபகரணங்களுடன் கூடிய ஐசியூ வசதி கொண்ட ஆம்புலன்ஸ்சை ஹர்திக் பட்டேல் உண்ணாவிரதம் இருக்கும் இடத்தில் நிறுத்தியுள்ளோம். டாக்டர்கள் பரிந்துரைகளை ஹர்திக் பட்டேல் ஏற்க மறுக்கிறார். அவர் மருத்துவர்களின் அறிவுறையை ஏற்று நடக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார் அமைச்சர்.
ஆதரவு அதிகரிப்பு
ஹர்திக் பட்டேலுக்கு, குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர்கள் மட்டுமின்றி, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், முன்னாள் பிரதமர் தேவகவுடா, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சி தலைவர்கள், ஹர்திக் பட்டேலை சந்தித்து, ஆதரவு தெரிவித்துள்ளனர்.
போலீசார் தடுப்பு
ஹர்திக் பட்டேலின் ஆதரவாளர்களை அவரது இல்லத்திற்கு வந்து உண்ணாவிரதத்தில் பங்கேற்க விடாமல் போலீசார் தடுத்துள்ளனர். எனவே, ஆங்காங்கு உள்ள நகரங்களில் அவர்கள் உண்ணா விரத போராட்டம் தொடங்கியுள்ளனர். இது குஜராத் அரசுக்கு தலைவலியாக மாறியுள்ளது.