இட ஒதுக்கீடு கோரிக்கை நிறைவேறாவிட்டால் போராட்டம் தீவிரமடையும். குஜராத் அரசுக்கு ஹர்திக் எச்சரிக்கை
அகமதாபாத் : இட ஒதுக்கீட்டுக்கு நாங்கள் எதிரானவர்கள் இல்லை எனவும், இட ஒதுக்கீடு குறித்து குஜராத் அரசுடன் பேச்சுவார்த்தை கிடையாது என்று பட்டேல் சமூக தலைவர் ஹர்திக் பட்டேல் கூறினார்.
குஜராத் மாநிலத்தில் பெரும்பான்மையாக வாழும் பட்டேல் சமூகத்தினர், தங்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதில் வெடித்த வன்முறைக்கு இதுவரை 10 பேர் பலியாகி உள்ளனர்.
இந்நிலையில், இந்த போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தி வரும் ஹர்திக் பட்டேல், ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது...
இடஒதுக்கீடு முறை கைவிடப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்பவில்லை. எங்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பதுதான் எங்களது ஒரே நோக்கம். அது நிறைவேறும் வரை ஓயமாட்டோம்.
இவ்வளவு வன்முறை நிகழ்ந்த பிறகு, இந்த பிரச்சினை தொடர்பாக, இப்போது குஜராத் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்த அர்த்தமும் இல்லை.
கோரிக்கை நிறைவேறாவிட்டால், எங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம். டெல்லிக்குச் சென்று குர்ஜார் சாதி தலைவர்களை சந்திப்பேன். போராட்டத்தை தீவிரப்படுத்துவது பற்றி அவர்களின் உதவியை கேட்பேன்.
எங்கள் கோரிக்கை நிறைவேறாவிட்டல், வரும் தேர்தலில் குஜரத்தில் தாமரை மலராது.
இவ்வாறு ஹர்திக் பட்டேல் கூறினார்.