வாக்குப் பதிவு இயந்திரம் மீதான புகார்களை திசை திருப்ப எக்ஸிட் போல் முடிவுகள்- ஹர்திக் பட்டேல் பொளேர்
வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீதான புகார்களை திசை திருப்பத்தான் எக்ஸிட் போல் முடிவுகள் வெளியிடப்பட்டன என ஹர்திக் பட்டேல் சாடியிருக்கிறார்.
அகமதாபாத்: குஜராத்தில் சட்டசபை தேர்தல் நேர்மையுடன் நடந்திருந்தால் பாரதிய ஜனதா கட்சிக்கு மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பே கிடைக்காது; மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தொடர்பான புகார்களை திசை திருப்பவே எக்ஸிட் போல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன என சாடியுள்ளார் பட்டேல்கள் சமூகத் தலைவர் ஹர்திக் பட்டேல்.
குஜராத்தில் 2-வது கட்ட சட்டசபை தேர்தல் முடிந்த கையோடு எக்ஸிட் போல் முடிவுகளும் வெளியிடப்பட்டன. அனைத்து எக்ஸிட் போல் முடிவுகளுமே குஜராத்தில் பாஜக ஆட்சியை தக்க வைக்கும் என்றே தெரிவித்திருந்தன.
இது தொடர்பாக காங்கிரஸுடன் கை கோர்த்துள்ள பட்டேல் சமூகத் தலைவர் ஹர்திக் பட்டேல் தம்து ட்விட்டரில் குஜராத்தி மொழியில் பதிவிட்டுள்ளதாவது:
எக்ஸிட் போல் முடிவுகளில் பாஜக வெற்றி பெறும் என வேண்டுமென்றே தெரிவிக்கப்படுகிறது. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மூலமான முறைகேடுகளை திசை திருப்புவதற்காகவே இப்படி செய்யப்படுகிறது.
જાણી જોઈને એક્ઝીટ પોલ માં ભાજપ જીતી રહી છે એવું દેખાડવામાં આવી રહ્યું છે.જેથી ઈવીએમ ની ગરબડી બાદ કોઈ ઈવીએમ પર શંકા ના કરે.આ જૂની ચાલ છે.જો ખરેખર આ ચૂંટણી સાચી છે તો પછી ભાજપને જીતવાના કોઈ જ અણસાર નથી.સત્યમેવ જયતે pic.twitter.com/15QWXofCKc
— Hardik Patel (@HardikPatel_) December 14, 2017
இது பாரதிய ஜனதாவின் கடந்த கால யுக்திதான். குஜராத்தில் சட்டசபை தேர்தல் நேர்மையுடன் நடந்திருந்தால் நிச்சயம் பாஜக வெல்லாது; அக்கட்சிக்கு வாய்ப்பே கிடைக்காது.
இவ்வாறு ஹர்திக் பட்டேல் பதிவிட்டுள்ளார்.