ஹரித்வார் கும்பமேளா: சாதுக்களை போல தாண்டவமாடும் கொரோனா- 2 நாளில் மட்டும் 1,000 பேருக்கு பாதிப்பு!
ஹரித்வார்: உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் நடைபெற்று வரும் இந்துக்களின் புனித நிகழ்வுகளில் ஒன்றான கும்பமேளாவில் பங்கேற்ற 1,000 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 நாளில் மட்டும் 1,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால் அங்கு கடும் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு படுமோசமாக இருந்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1.85 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
'திரும்பி வந்துட்டேனு சொல்லு'.. ஒரு நாள் தடைக்கு பிறகு.. இன்று மீண்டும் பிரசாரத்தை தொடங்கும் மம்தா
நாட்டிலேயே கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது மகாராஷ்டிரா மாநிலம்தான். இதனால் மகாராஷ்டிராவில் 15 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறையான நிகழ்வு
இதனிடையே 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஹரித்வாரில் நடைபெறும் இந்துக்களின் புனித நீராடல் நிகழ்வான கும்பமேளா தற்போது நடைபெற்று வருகிறது. சுமார் 3 மாதங்கள் நடைபெறும் இந்த கும்பமேளா புனித நீராடல் நிகழ்ச்சியானது 2 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது. சிவராத்திரி, பெளர்ணமி போன்ற நாட்களில் ஹரித்வாரில் பிரவாகம் எடுத்து ஓடும் கங்கை நதியில் புனித நீராடுவதுதான் கும்பமேளாவின் மிக முக்கியமான நிகழ்வு.
கும்பமேளாவில் நடப்பது என்ன?
பொதுவாக கும்பமேளா காலங்களில் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான சாதுக்கள் ஒன்று திரள்வர். இந்த காலத்தில்தான் சாதுக்களின் அமைப்புகளான அகாடாக்களின் மகா மண்டலேஸ்வர்கள் எனப்படும் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இந்த கும்பமேளா காலங்களில் சாதுக்கள் நிர்வாணமாக சாகசங்கள் செய்தபடி பேரணியாக சென்று புனித நீராடுவது வழக்கம். அப்படி புனித நீராட பேரணியாக செல்லும் போது சாதுக்களின் எந்த அமைப்பு முதலில் புனித நீராடுவது என்பதில் மோதல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்ட சம்பவங்களும் நிகழ்ந்திருக்கின்றன.
கொரோனா தடுப்பு பலனில்லை
இருந்த போதும் கும்பமேளாக்கள் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டு வருகின்றன. இந்த கும்பமேளா நிகழ்ச்சிகளுக்கு அரசுதான் நிதி உதவியும் வழங்குகிறது. இந்த ஆண்டு கொரோனா பரவலுக்கு மத்தியிலும் கும்பமேளாவுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் கொரோனா கால கட்டுப்பாடுகள் அத்தனையும் காற்றில் பறக்கவிடப்பட்டன. கொரோனா தடுப்பு அதிகாரிகளின் முயற்சிகளும் எந்தவித பயனையும் தரவில்லை.
அரங்கேறும் விதிமீறல்கள்
சாதுக்கள், பக்தர்கள் பல்லாயிரக்கணக்கில் ஒரே நேரத்தில் புனித நீராடுவது, ஹரித்வார் தெருக்களில் பெருந்திரளாக முக கவசம் கூட அணியாமல் வலம் வருவது, கொரோனா பரிசோதனைகளுக்கு உட்படுத்த மறுப்பது என எல்லாவித விதி மீறல்களும் கும்பமேளாவில் அரங்கேறுகின்றன. இதன் விளைவாக ஒவ்வொரு நாளும் கொரோனா பரவல் கொத்து கொத்தாக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 594 பேருக்கு கொரோனா உறுதியானது. ஹரித்வார் கும்பமேளாவில் 2 நாட்களில் மட்டுமே 1,000 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
ஒரே நாளில் 594 பேருக்கு பாதிப்பு
உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 1925 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதில் 594 பாதிப்புகள், ஹரித்வார் கும்பமேளாவில் உறுதியானவை. மேலு உத்தரகாண்ட் மாநிலத்தில் 24 மணிநேரத்தில் மொத்தம் 13 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். ஹரித்வார் நகரில் தற்போதைய நிலையில் 2,812 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றும் வருகின்றனர். உத்தரகாண்ட் மாநிலத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,12,071. மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1,780.
உச்சம் அடையும் என அச்சம்
இந்த நிலையில் கும்பமேளாவுக்காக நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான குவிந்து வருகின்றனர். அங்கே முறையான கொரோனா கால கட்டுப்பாடுகளை அமல்படுத்தாவிட்டால் நாள்தோறும் 1,000-த்தை தாண்டியதாக கொரோனா பாதிப்பு இருக்கும் என்கிற அச்சம் நிலவுகிறது. இதனிடையே உத்தரகாண்ட் முதல்வர் தீரத் சிங், கும்பமேளா நிகழ்வையும் டெல்லி நிஜாமுதீன் மர்கஸ் ஒன்றுகூடல் நிகழ்வையும் ஒப்பிட்டு கருத்து தெரிவித்திருக்கிறார்.
நிஜாமுதீன் மர்கஸ்
அதாவது ஆண்டுதோறும் தெற்கு டெல்லி நிஜாமுதீன் மர்கஸ் பள்ளிவாசலில் ஆண்டுக்கு ஒருமுறை தப்லீக் ஜமாஅத் அமைப்பினர் ஒன்று கூடுவர். கடந்த ஆண்டு கொரோனா பரவல் தொடக்கத்தின் போது தப்லீக் ஜமாஅத் அமைப்பின் ஒன்றுகூடலுக்காக வெளிநாட்டில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் வருகை தந்தனர். இவர்களால்தான் கொரோனா பரவியது என தகவல்கள் பரப்பிவிடப்பட்டு இவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. பின்னர் நீதிமன்றம் தலையிட்டு வெளிநாட்டினவரை அனுப்பி வைத்தது.
உத்தரகாண்ட் முதல்வர் கருத்து
தற்போது நிஜாமுதீன் மர்கஸ் ஒன்றுகூடலையும் கும்பமேளாவையும் ஒரே மாதிரியாக பார்க்கக் கூடாது என்று உத்தரகாண்ட் முதல்வர் தீரத் சிங் கூறியுள்ளார். ஏனெனில் கும்பமேளா என்பது பொதுவெளியில் திறந்த புனித நீராடலாக நடைபெறுகிறது. நிஜாமுதீன் மர்கஸ் ஒன்று கூடல் என்பது ஒரு குறிப்பிட்ட இடத்துக்குள் நடைபெறுகிறது. ஆகையால் இரண்டும் ஒன்று அல்ல என்கிறார் தீரத்சிங். அத்துடன் மர்கஸ் ஒன்றுகூடலுக்கு வெளிநாட்டில் இருந்து வருகை தருவர். ஆனால் கும்பமேளாவுக்கு உள்நாட்டு பக்தர்கள்தான் வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.