கும்பமேளாவில் 5 நாட்களில் 2,167 கொரோனா பாதிப்புகள்- பேரபாயத்தை நெருங்கும் ஹரித்வார் புனித நகரம்!
ஹரித்வார்: உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் 5 நாட்களில் 2,167 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் கொரோனா கட்டுப்பாடுகள் காற்றில் பறக்கவிடப்படும் கும்பமேளாவை முன்கூட்டியே நிறுத்திவிட முடியாது என்கிறது உத்தரகாண்ட் மாநில அரசு.
இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பானது 1.99 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்பு 1,40,70,890 ஆகும்.
புதிய ஹாட்ஸ்பாட்டாக உருவெடுக்கும் கும்பமேளா? 6 நாட்களில் 2,167 பேருக்கு கொரோனா.. திணறும் உத்தரகண்ட்
இந்தியாவில் ஒருநாள் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1,037. மொத்த கொரோனா உயிரிழப்புகள் எண்ணிக்கை 1,73,152.
உத்தரகாண்ட் நிலவரம்
மாநிலங்களைப் பொறுத்தவரையில் மகாராஷ்டிராவில் ஒருநாள் பாதிப்பு 58,952 ஆக அதிகரித்துள்ளது. தற்போது கும்பமேளா நடைபெற்று வரும் உத்தரகாண்ட் மாநிலத்திலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. உத்தரகாண்ட் மாநிலத்தில் நேற்று ஒருநாள் மட்டுமே 1953 பேருக்கு கொரோனா உறுதியானது.
ஹரித்வார் கும்பமேளா
கும்பமேளா நடைபெற்று வரும் ஹரித்வார் நகரில் பல லட்சம் பேர் ஒவ்வொரு நாளும் திரண்டு வருகின்றனர். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் கும்பமேளாவில் கங்கை நதியில் புனித நீராடுவது இந்துக்களின் கடமைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இதற்காகவே கங்கை நதி சமவெளியில் முதன் முதலாக பாய்ந்தோடும் ஹரித்வார் திருத்தலத்துக்கு பல லட்சம் பக்தர்கள் வருகை தருகின்றனர்.
கொரோனா கட்டுப்பாடுகள் இல்லை
ஆனால் இத்தனை லட்சம் பேரும் சமூக இடைவெளியை பின்பற்றாமல், முக கவசம் எதுவும் அணியாமல் ஒரே நேரத்தில் கங்கை நதியில் புனித நீராடுவதுதான் பெரும் கவலைக்குரியதாகிவிட்டது. ஹரித்வார் நகரில் கடந்த நாட்களில் மட்டும் 2167 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கங்கையில் முகாமிட்டுள்ள சாதுக்களின் அமைப்புகளின் அகாடாக்களின் தலைவர்களும் கூட கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கும்பமேளா நிறுத்தம் இல்லை
இருப்பினும் உத்தரகாண்ட் முதல்வர் தீரத்சிங் ராவத்தோ, ஹரித்வாரில் கங்கை மாதா அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார். கொரோனாவின் பிடியில் இருந்து எங்கை கங்காதேவி காப்பாற்றுவார் என்கிற நம்பிக்கை இருக்கிறது என்கிறார். அத்துடன் கும்பமேளா என்பது 3 மாதங்கள் நடைபெறக் கூடியது. அதை முன்கூட்டியே நிறுத்துவது சாத்தியமில்லை என்றும் தீரத்சிங் ராவத் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
அபாயத்தில் ஹரித்வார்
இதனால் ஹரித்வார் நகரில் கொரோனா பரவல் மிக வேகமாக உச்சத்தை எட்டும் அபாயம் உள்ளது. ஹரித்வார் நகரில் முகாமிட்டுள்ள அதிகாரிகளாலும் பக்தர்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. இதனால் ஹரித்வார் புனித நகரமானது கொரோனாவால் பெரும் பாதிப்பை எதிர்கொள்ளும் அபாயத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்கின்றனர் உத்தரகாண்ட் சுகாதாரத்துறை அதிகாரிகள்.