போலி பட்டபடிப்பு சான்றிதழ்... பஞ்சாப் டிஎஸ்பி பணியை இழக்கிறாரா ஹர்மன்பிரீத் கௌர்
போலியாக தயார் செய்யப்பட்ட பட்டப்படிப்பு சான்றிதழை சமர்ப்பித்ததால் இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை ஹர்மன்பிரீத் கௌர் பஞ்சாப் டிஎஸ்பி பணியை இழக்கவுள்ளார்.
Recommended Video
சண்டீகர்: பஞ்சாப் போலீஸில் டிஎஸ்பியாக பணி வழங்கப்பட்ட இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை ஹர்மன்பிரீத் கௌர் போலி சான்றிதழ்களை சமர்ப்பித்ததாக செய்திகள் கூறுகின்றன.
பஞ்சாப் மாநிலம் மோகாவை சேர்ந்தவர் ஹர்மன்பிரீத் கௌர். இவர் மகளிர் இந்திய கிரிக்கெட் அணியில் உள்ளார். இவர் கடந்த ஆண்டு ஐசிசியின் பெண்களுக்கான உலக கோப்பை போட்டியின்போது சிறப்பாக விளையாடினார். இவர் அர்ஜுனா விருதை பெற்றவர்.
இதற்காக அவருக்கு ரயில்வே துறையில் பணி கிடைத்தது. இதையடுத்து அந்த பணி வேண்டாம் என்றும் தனக்கு பஞ்சாப் போலீஸில் டிஎஸ்பியாக பணியாற்றவே விருப்பம் என்று ஹர்மன்பிரீத் கௌர் கூறியுள்ளார்.
டிஎஸ்பி ஹர்மன்பிரீத்
இது பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கின் கவனத்துக்கு சென்றது. இதையடுத்து ரயில்வே அமைச்சகத்தை தொடர்பு கொண்ட அமரீந்தர், அந்த பணி ஒப்பந்தத்தை ரத்து செய்யுமாறு மோகாவில் டிஎஸ்பியாக பணியாற்ற ஹர்மன்பிரீத்தை அனுமதிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
வாழ்த்து கூறிய முதல்வர்
இதையடுத்து கடந்த மார்ச் 1-ஆம் தேதி பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கும், மாநில டிஜிபியாக உள்ள சுரேஷ் அரோராவும் ஹர்மன் பிரீத்துக்கு டிஎஸ்பி பதவிக்கான நட்சத்திரங்களை சீருடையில் குத்திவிட்டனர். இதுகுறித்து அமரீந்தர் கூறுகையில் நமது மாநிலத்துக்கு இந்த பெண் பெருமை சேர்த்துள்ளார். இவர் இப்பதவியில் சிறப்பாக தொடர்வார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. ஹர்மன்பிரீத்துக்கு எனது வாழ்த்துகள் என்றும் தெரிவித்தார்.
போலி சான்றிதழ்
ஹர்மன்பிரீத் பணியில் சேருவதற்கு முன்னர் தான் மீரட்டில் உள்ள சவுத்ரி சரண் சிங் பல்கலைக்கழகத்தில் பட்டம் பயின்றதாக சான்றிதழ்களை சரிபார்க்கும் பணிக்கு அனுப்பியுள்ளார். இதை ஜலந்தரில் உள்ள பஞ்சாப் ஆயுத படை போலீஸார் மீரட்டுக்கு அனுப்பியதில் அந்த சான்றிதழில் உள்ள பதிவு எண் போலியானது என்று தெரியவந்தது.
பதவி இழக்கும் சூழல்
இதையடுத்து போலி சான்றிதழ் கொடுத்துள்ளதால் ஹர்மன்பிரீத் கௌர் பஞ்சாப் போலீஸில் டிஎஸ்பியாக தொடர முடியாது என்று முதல்வர் அமரீ்நதர் சிங்குக்கு மாநில உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதனால் ஹர்மன்பிரீத் கௌர் டிஎஸ்பி பதவி இழக்கும் சூழல் நிலவுகிறது.