வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு: உத்தரபிரதேசத்தில் குளிருக்கு 70 பேர் பலி
உத்தர பிரதேசத்தில் நிலவி வரும் கடுமையான பனிப்பொழிவால் இதுவரை 70க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.
டெல்லி : வடமாநிலங்களில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. குளிர் தாங்க முடியாமல் உத்தர பிரதேசத்தில் மட்டும் இதுவரை 70 பேர் பலியாகி உள்ளனர்.
இந்தியாவின் வடமாநிலங்களில் ஆண்டுதோறும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் கடுமையான பனிப்பொழிவு நிலவுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் கடுமையான குளிர் நிலவி வருகிறது.
மலைப்பிரதேச மாநிலங்களில் 2 டிகிரி செல்சியஸும், தரைப்பகுதிகளில் 5 டிகிரி செல்சியஸும் குளிர் நிலவுகிறது. இன்னமும் ஒரு வார காலத்திற்கு குளிர் நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இந்த கடுமையான பனிப்பொழிவின் காரணமாக இதுவரை 20க்கும் மேற்பட்ட ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது. அதுபோல வடமாநிலங்களில் பல விமான சேவைகளும் அதிக எண்ணிகையில் பாதிக்கப்பட்டு உள்ளன.
மேலும் இந்த மோசமான குளிரின் காரணமாக, தங்குவதற்கு வீடுகள் இன்றி சாலை ஓரங்களில் தங்கி வரும் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை குளிரின் காரணமாக உத்தர பிரதேச மாநிலத்தில் மட்டும் 70 பேர் பலியாகி உள்ளனர். மற்ற மாநிலங்களில் 22 பேர் பலியாகி உள்ளனர். இந்த எண்ணிக்கை இன்னமும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த இறப்புகளைத் தடுக்க உத்தர பிரதேச மாநிலம் முழுவதும் அரசு சார்பில் கூடாரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் தீ மூட்டி குளிர் காய விறகுகளும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இதிலும் ஊழல் நடப்பதாக புகார்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளது.