பாஜக கூட்டணிக்கு விவசாயிகளின் வேதனையை கேட்கும் அளவுக்கு செவித்திறன் இல்லை.. ஹர்சிம்ராத் கவுர்
அமிருதசரஸ்: பாஜக கூட்டணிக்கு நாங்கள் சொல்வது காதில் விழவில்லை என முன்னாள் அமைச்சர் ஹர்சிம்ராத் கவுர் விமர்சித்துள்ளார்.
வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்கள் இரு அவைகளிலும் நிறைவேறியது.
மக்களவையில் நிறைவேறிய போதே பாஜக கூட்டணியில் உள்ள அகாலி தளம் கட்சியின் அமைச்சர் ஹர்சிம்ராத் கவுர் அந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
ஏங்க கொரோனாவும் இல்ல... ஒன்னும் இல்ல.. இது உங்களுக்கு தேவையா... கே.என்.நேரு 'கலகல' பதில்..!
பாதகம்
இந்த நிலையில் இந்த 3 மசோதாக்களும் விவசாயிகளுக்கு பெரும் பாதகமாக மாறும் என மத்திய அரசை எச்சரித்த சிரோமணி அகாலிதளம், அந்த மசோதாக்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யாமல் தேர்வு கமிட்டியின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.
செவி சாய்க்கவில்லை
தங்கள் கோரிக்கைக்கு பாஜக செவி சாய்க்கவில்லை என்றும் பாஜக அரசு அவர்கள் இயற்றிய சட்டத்தில் உறுதியாக உள்ளதாகவும் அகாலி தளம் தெரிவித்தது. இதையடுத்து பாஜக கூட்டணியிலிருந்து விலகுவது குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும் என அவர் கூறியிருந்தார். இந்த நிலையில் சிரோமணி அகாலிதளத்தின் முக்கிய ஆலோசனை கூட்டம் நேற்று சண்டீகரில் நடைபெற்றது.
கூட்டணியிலிருந்து விலகுவது
இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகுவது என முடிவு செய்யப்பட்டது. இதை அந்த கட்சியின் தலைவர் சுக்பிர் சிங் பாதல் அறிவித்தார். இதுகுறித்து ஹர்சிம்ராத் கவுர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் மத்திய அரசின் பிடிவாதமான நிலைப்பாட்டை 3 கோடி பஞ்சாப் மக்களின் வலியும் போராட்டமும் தளர்த்துவதில் தோல்வி அடைந்துவிட்டதால் முன்னாள் பிரதமர் வாஜ்பாயும், பாதலும் இணைந்து உருவாக்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியாக நீண்ட காலத்திற்கு இருக்க முடியாது.
பார்வை இல்லை
இப்போது இருக்கும் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு செவித்திறன் இல்லை. தேசத்திற்கு நீண்டகாலமாக உணவு அளித்து வரும் பஞ்சாப் மக்களின் நலனைப் பார்ப்பதில் பார்வை இழந்துவிட்டது என்றும் கவுர் பதிவிட்டுள்ளார். இந்த விவசாய மசோதாவை எதிர்த்து ஆங்காங்கே விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.