ஹரியானா: ஜாட்- தலித்துகள் வாக்குகளை அலேக்காக அறுவடை செய்த காங்., துஷ்யந்தின் ஜேஜேபி!
Recommended Video
சண்டிகர்: ஹரியானாவில் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் பெரும்பான்மைய பெற முடியாத நிலையில் அம்மாநிலத்தில் தொங்கு சட்டசபை உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் முன்னாள் முதல்வர் சவுதாலாவின் பேரன் துஷ்யந்த் சவுதாலாவின் ஜேஜேபிதான் தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்துள்ளது.
ஹரியானாவில் ஆளும் பாஜக, மீண்டும் தாங்களே ஆட்சிக்கு வருவோம் என கனவு கண்டது. இதற்கு காரணம் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை இல்லாததுதான்.
காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக குமாரி செல்ஜா தேர்தலுக்கு முன்னர் நியமிக்கப்பட்டார். இதற்கு அம்மாநில காங்கிரஸில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்திய தேசிய லோக் தள், சவுலாதா பேரன் துஷ்யந்த் சவுதாலாவின் ஜேஜேபி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிகள் இணைந்து மெகா கூட்டணியை அமைக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
தொடங்கி 1 வருடம் கூட ஆகவில்லை.. 319 நாளில் கிங் மேக்கராகும் ஜேஜேபி.. ஹரியானா அரசியலில் பரபரப்பு!
ஒற்றுமையில்லா எதிர்க்கட்சிகள்
ஆனால் அத்தனை எதிர்க்கட்சிகளும் ஆளுக்கு ஒரு திசையில் முறைத்துக் கொண்டு நின்றன. அம்மாநிலத்தைப் பொறுத்தவரையில் ஜாட் சமூகத்தினர் பெரும்பான்மையினர். அதற்கு அடுத்ததாக தலித்துகளின் வாக்கு வங்கி இருக்கிறது.
ஜாட் அதிருப்தி
இந்த இரு பிரதான வாக்கு வங்கிகளைத் தவிர்த்த எஞ்சிய வாக்குகளை ஒருமுகப்படுத்தி வைத்திருந்தது பாஜக. ஹரியானாவில் ஜாட் சமூகத்தினர்தான் முதல்வராகி வந்தனர். இந்த மரபை உடைத்து பஞ்சாபியான மனோகர் லால் கட்டாரை முதல்வராக்கியது பாஜக. இதனால் ஜாட் ஜாதியினர் கடும் கோபத்தில் இருந்தனர். அத்துடன் 2016 ஜாட் சமூகத்தினரின் இடஒதுக்கீடு கோரி நடத்திய போராட்டத்தை பாஜக அரசு ஒடுக்கியதாலும் மிகப் பெரும் அதிருப்தியில் இருந்தனர்.
தலித்துகள் கோபம்
தேரா சச்சா சவுதா தலைவர் குர்மீத் ராம் ரஹீமை பலாத்கார வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தது பாஜக அரசு. இதன் மூலம் அவரது ஆதரவாளர்களான தலித்துகளும் பாஜக மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வந்தனர்.
எதிர்க்கட்சிகள் அலட்சியம்
இப்படி பாஜகவுக்கு எதிராக பெரும்பான்மை ஜாதி வாக்குகள் அணி திரண்டு நின்றன. இதைப்பற்றி பாஜக கவலைப்படாத போதும் எதிர்க்கட்சிகள் அக்கறை காட்டவில்லை.
பாஜகவின் உற்சாகம்
இதனை அறுவடை செய்ய எதிர்க்கட்சிகள்தான் ஓரணியில் திரளாமல் போயின. இதனால் பாஜக பெரும் உற்சாகத்தில் இருந்தது. இருப்பினும் கூட பாஜக பக்கம் இந்த வாக்குகள் சாயவில்லை என்பதையே தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தி உள்ளன.
காங், ஜேஜேபி மீது நம்பிக்கை
காங்கிரஸ் மற்றும் துஷ்யந்த் சவுதாலாவின் ஜேஜேபியை நம்பி வாக்குகளை கொடுத்திருக்கின்றன இந்த ஜாதிகள். தற்போதைய நிலையில் ஹரியானாவில் தொங்கு சட்டசபை ஏற்பட்டுள்ளது.
துஷ்யந்த் தீர்மானிக்கும் சக்தி
தற்போது தீர்மானிக்கும் சக்தியாக துஷ்யந்த் சவுதாலாவின் ஜேஜேபி உருவாகி உள்ளது. கர்நாடகா பாணியில் காங்கிரஸ் ஆதரவுடன் முதல்வர் பதவியை பெறுவதற்கான முயற்சிகளை துஷ்யந்த் தொடங்கி உள்ளார். கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களைப் பெற்ற போதும் பாஜக ஆட்சியில் அமரக் கூடாது என்பதற்காக ஜேடிஎஸ்-ன் குமாரசாமியை முதல்வராக்க ஆதரவு கொடுத்தது. அதே பார்முலா இப்போது ஹரியானாவிலும் அரங்கேறக் கூடும் என்றே தெரிகிறது.
பாஜகவுக்கும் தூண்டில்
அதே நேரத்தில் பாஜக, தமக்கு முதல்வர் பதவியை விட்டுத் தந்தால் அக்கட்சி ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைக்கவும் ரெடி என துண்டு விரித்திருக்கிறார் துஷ்யந்த். இதனால் ஹரியானா அரசியல் களம் பரபரத்து கொண்டிருக்கிறது.