ஹரியானா தேர்தல்- பாஜகவில் உட்கட்சி மோதல்! வேட்பாளர் தேர்வு குறித்து சிபிஐ விசாரிக்க கோரிக்கை!!
சண்டிகர்: ஹரியானா மாநில சட்டசபை தேர்தலில் வெல்லும் வாய்ப்புள்ள பாரதிய ஜனதாவில் உட்கட்சி மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என்று பாஜகவினரே போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
ஹரியானா மாநிலத்தில் மொத்தம் உள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 15-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. 10 ஆண்டுகாலமாக ஆட்சியில் உள்ள காங்கிரஸ் அரசு மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன.
பாஜகவுக்கு சாதகம்
அத்துடன் முதல்வர் ஹூடாவுக்கு எதிராக பல காங்கிரஸ் தலைவர்கள் கட்சியைவிட்டே வெளியேறி பாரதிய ஜனதாவில் இணைந்துவிட்டனர். இம்மாநிலத்தில் பாரதிய ஜனதாவில் குறிப்பிடும்படியான தலைவர் எவரும் இல்லை. ஆனால் ஆளும் காங்கிரஸ் மீதான அதிருப்தி, ஆம் ஆத்மி கட்சி தேர்தலில் ஒதுங்கிக் கொண்டது போன்ற காரணங்களால் அக்கட்சிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
உட்கட்சி மோதல்
இந்த நிலையில் பாஜகவுக்குள் உட்கட்சி மோதல் வெடித்துள்ளது. தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத மூத்த தலைவர்கள், பிரதமர் மோடி இந்த பிரச்சனையில் தலையிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிபிஐ விசாரணை
அத்துடன் பாரதிய ஜனதாவின் வேட்பாளர் தேர்வு குறித்து சிபிஐ விசாரணை நடத்தவும் பிரதமர் உத்தரவிட அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
பொதுச்செயலர் ராஜினாமா
இதன் உச்சமாக பாஜகவின் மாநில பொதுச்செயலர் ஜஸ்பிர் மல்லாவுர் நேற்று தமது கட்சிப் பதவியை ராஜினாமா செய்தார். அவர் அம்பாலா நகர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டிருந்தார். அவருக்கு சீட் கொடுக்கப்படவில்லை. இதனால் அவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இதேபோல் பாஜகவின் மற்றொரு மூத்த தலைவராக கோதராவும் கோதாவில் குதித்துள்ளார்.
90 பேரைத்தானே தேர்வு செய்யனும்..
ஆனால் பாஜகவின் ஹரியானா மாநில மேலிடப் பொறுப்பாளர் கைலாஷ் விஜயவர்கியாவோ, வேட்பாளர்கள் தேர்வு என்பது பாஜக தலைவர் அமித்ஷா மற்றும் பிரதமர் மோடி முன்னிலையில்தான் நடைபெற்றது. மொத்தம் 3 ஆயிரம் பேர் போட்டியிட விருப்பம் தெரிவித்தனர். ஆனால் இருப்பது 90 தொகுதிகள்தானே.. 90 பேரைத்தானே தேர்வு செய்ய முடியும் என்று அவர் கூறியுள்ளார்.
மேலிடம் அதிர்ச்சி
இந்த கலகக் குரல்களால் பாஜகவின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படும் என்று அக்கட்சியின் மேலிடத் தலைவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால் சமரச முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.