முதல்வர் கொடுத்த காலி “கவர்” – ஹரியானா காமன்வெல்த் வெற்றி வீரர்கள் அதிர்ச்சி!
சோனேபட்: ஹரியானா முதல்வர் புபிந்தர் சிங் ஹூடா கொடுத்த விளையாட்டு வீரர்களுக்கான காசோலை பரிசு கவரில் காசோலை இல்லாததால் வீரர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் பங்கேற்ற அரியானாவை சேர்ந்த சுஷில் குமார், யோகேஷ்வர் தத் உள்ளிட்ட விளையாட்டு நட்சத்திரங்களுக்கு பாராட்டு மற்றும் பரிசுப்பணம் தரப்பட்டது.
பதக்கம் வெல்லாத மாற்றுத்திறனாளி வீரர்களுக்கும் தலா ரூபாய் 5 லட்சம் கொடுக்க முடிவு செய்தனர்.இந்த விழா சமீபத்தில் நடந்தது. இதில் பிரசாந்த் கர்மாகர் (நீச்சல்), ஜெய்தீப் சிங்கிற்கு (வட்டு எறிதல்) அரியானா முதல்வர் புபிந்தர் சிங் ஹூடா பரிசு கொடுத்தார்.
இதைத் திறந்து பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி தான் கிடைத்தது. இந்த கவரில், வாழ்த்து நோட்டீஸ் மட்டுமே இருந்தது. ரூபாய் 5 லட்சத்துக்கான காசோலை எதுவும் இல்லை.
இதுகுறித்து ஜெய்தீப் சிங் கூறுகையில்,'' காமன்வெல்த் போட்டியில் வட்டு எறிதல் நான்காவது இடம் பெற்றேன். இங்கு பரிசுக் கவரை திறந்து பார்த்த போது, ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன். விளையாட்டு வீரர்களை அரசு இப்படி நடத்தியிருக்கக் கூடாது'' என்றார்.
ஹரியானா பாரா ஒலிம்பிக் செயலர் கிரிராஜ் சிங் கூறுகையில்,'' இந்த இருவரும் பதக்கம் வெல்லவில்லை. இருப்பினும், கடைசி நேரத்தில் இவர்கள் பெயர், விருது பட்டியலில் சேர்க்கப்பட்டதால் தவறு நடந்திருக்கலாம்,'' என்று கூறியுள்ளார்.
10 நாளில் கிடைக்கும் வீரர்களுக்கு உரிய பணத்தை அனுப்பி வைப்பதாக ஹரியானா விளையாட்டு அமைச்சகம் உறுதி தெரிவித்துள்ளது.