பள்ளியில் இருந்து நீக்கப்பட்டதால் ஆத்திரம்... முதல்வரை துப்பாக்கியால் சுட்டுத் தள்ளிய ஹரியானா மாணவன்
ஹரியானாவில் பள்ளிக்கு சரியாக வருவதில்லை என்று வகுப்பாசிரியர் திட்டியதால் ஆத்திரம் அடைந்த மாணவன் பள்ளி முதல்வரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யமுனா நகர் : ஹரியானாவின் யமுனா நகரில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு மாணவன் பள்ளி முதல்வரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 3 குண்டு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பள்ளி முதல்வர் உயிரிழந்துள்ளார்.
12ம் வகுப்பில் காமர்ஸ் பிரிவில் படித்து வந்த அந்த மாணவன் வகுப்புக்கு சரியாக வருவதில்லை, சக மாணவர்களோடு சண்டையிடுவது உள்ளிட்ட காரணங்களுக்காக கடந்த வாரத்தில் பள்ளியை விட்டு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளான். இதனால் ஆத்திரத்தில் இருந்த அவன் துப்பாக்கியுடன் பள்ளிக்கு வந்து பள்ளி முதல்வரை சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளான்.
இதனையடுத்து நேரே முதல்வர் ரித்து சப்ரா அறைக்கு சென்ற மாணவன் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுடத் தொடங்கியுள்ளான். இதில் 3 குண்டுகள் பாய்ந்த நிலையில் ரித்து சப்ரா மயங்கி விழுந்துள்ளார்.
இதனையடுத்து பள்ளி உதவியாளர் மற்றும் ஆசிரியர்கள் உள்பட 5 பேர் சுற்றி வளைத்து மாணவனை பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர். குண்டடிபட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட மாணவனிடம் துப்பாக்கிய யாருடையது என்று நடத்தப்பட்ட விசாரணையில் தன்னுடைய தந்தை லைசென்ஸ் பெற்று வைத்திருக்கும் துப்பாக்கியைத் தான் எடுத்து வந்து மாணவன் சுட்டுள்ளது தெரிய வந்துள்ளது. நாடு முழுவதும் ஆசிரியர், மாணவர்கள் இடையேயான பிரச்னைகளால் ஏற்படும் குற்ற சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன.
கடந்த ஜனவரி மாதத்தில் லக்னோவில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவனை பள்ளிக்கு விடுமுறை விட வேண்டும் என்பதற்காக சீனியர் மாணவி ஒருவர் பள்ளி வளாகத்திலேயே கத்தியால் குத்தி தாக்கிய சம்பவம் நடந்தது. இதே போன்று மாணவர்கள் அடுத்தடுத்து வன்முறை சம்பவங்களில் அதிலும் பள்ளி வளாகத்திலேயே வன்முறைகளை கையாள்வது தொடர்கதையாகி வருகிறது.