"டீ" கட்டணத்தை மொபைல் பேங்கிங் மூலம் செலுத்திய ஹரியானா முதல்வர்
தான் அருந்திய தேநீருக்கு மொபைல் மூலம் பணம் செலுத்தியிருக்கிறார் ஹரியானா மாநிலம் முதல்வர் மனோகர் லால் கட்டார்.
சண்டீகர்: ரொக்கமில்லா பணப்பரிவர்த்தனையை மக்களிடையே ஊக்குவிக்கும் விதமாக ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் தான் அருந்திய தேநீருக்கு மொபைல் இ- சேவை மூலம் பணம் செலுத்தியுள்ளார்.
ரொக்கம்மில்லா பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. நகர்ப்புற மக்களுக்கு இந்த சலுகை ஓரளவுக்கு பயனுள்ளதாக இருந்தாலும் கிராமப் புற மக்களுக்கு இது சற்று சிரமத்தை ஏற்படுத்தும். இருந்தாலும் மத்திய அரசு விடாப்பிடியாக எப்படியும் இந்த திட்டத்தை வெற்றியடையச் செய்ய வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.
இந்தநிலையில் ஹரியானா மாநில முதல்வர் தான் அருந்திய தேநீருக்கு மொபைல் மூலம் கட்டணம் செலுத்தியுள்ளார்.
சட்டசபை நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்ட முதல்வர் மனோகர் லால் கட்டார் பின்பு அருகிலுள்ள டீ கடைக்குச் சென்று தேநீர் அருந்தினார். அதன்பின் அதற்கான கட்டணத்தை தனது மொபைலில் உள்ள இ - சேவை மூலம் அந்த கடைக்காரரின் அக்கவுண்ட்டுக்கு பரிமாற்றம் செய்தார்.
அத்துடன் மற்றவர்களுக்கும் ஆன் லைன் மூலம் பணம் செலுத்தும் முறையை கற்றுக் கொடுக்கும்படியும் கேட்டுக்கொண்டார். பணமில்லா பரிவர்த்தனையை மக்களிடம் பிரபலப்படுத்தும் நோக்கில் மனோகர் லால் கட்டார் இவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது.