ஓய்வுபெற்ற ராணுவ பெண் மருத்துவர் மீது மோதிய முன்னாள் தலைமை செயலர் கார்.. ஹரியானாவில் கொந்தளிப்பு!!
சண்டிகர்: ஓய்வுபெற்ற 90 வயது ராணுவ பெண் மருத்துவர் மீது ஹரியானா முன்னாள் தலைமைச் செயலர் அனில்குமார் கார் மோதியது. இதில் படுகாயமடைந்த அந்த மூதாட்டியை கண்டு கொள்ளாமல் தியேட்டரில் குடும்பத்துடன் போய் தலைமை செயலர் அனில்குமார் படம் பார்த்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானாவைச் சேர்ந்த கோவிந்த்சிங் டனோவா என்ற இளைஞர் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் கடந்த 26-ந் தேதியன்று ஒரு பதிவிட்டிருந்தார். அதில், தன்னுடைய பாட்டி கேப்டன் டாக்டர் பி.கே. டனோவா(1962ஆம் ஆண்டு போரில் பங்கேற்றவர்) மீது சண்டிகர் தாகூர் தியேட்டர் வளாகத்தில் முன்னாள் தலைமைச் செயலர் அனில்குமாரின் அரசு வாகனம் மோதியது.
The Top Story #FrontPage #News #India :
https://t.co/xzXFdiENez
The Full Story #Facebook :
https://t.co/YMg6vmFkxm pic.twitter.com/roQuOD3FPp
— Gobind Singh Dhanoa (@gsdhanoa) September 27, 2015
இதில் நிலைகுலைந்த அவர் படுகாயமடைந்தார். ஆனால் என்னுடைய டிரைவர் தவறு செய்துவிட்டார்.. என்று கூறி சட்டென அந்த இடத்தை விட்டு நகர்ந்து குடும்பத்துடன் தியேட்டருக்குள் சினிமா பார்க்க நுழைந்துவிட்டார் அனில்குமார். என்னுடைய பாட்டிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கவோ அல்லது உதவி செய்யவோ அவர் பொறுத்திருக்கவில்லை. இந்த நாட்டின் மூத்த குடிமக்களை வி.ஐ.பி.க்கள், அதிகாரவர்க்கம் இப்படித்தான் நடத்துமா?
இது பிரதமர் நரேந்திர மோடிக்கு சென்றடைய வேண்டும் என்று கொந்தளிப்புடன் ஒரு பதிவைப் போட்டார். அவ்வளவுதான் மக்கள் கொந்தளித்துவிட்டார்கள்.. 2,670 பேர் இதை ஷேர் செய்து ஃபேஸ்புக்கில் போட ஹரியானா மாநிலமே கொந்தளித்தது.
ஏற்கெனவே ஓய்வு பெற்ற ராணுவத்தினர் ஒரே பதவி... ஒரே ஓய்வூதியம் என்ற கோரிக்கையில் மத்திய அரசு மீது அதிருப்தியில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் வி.ஐ.பி.க்கள் இப்படித்தான் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களை நடத்துவதா? என்ற கோபமும் இணைந்து கொண்டிருக்கிறது.
ஊடகங்களும் இந்த சம்பவத்தை விவாதப் பொருளாக்கி இருக்கின்றன.