நடு ரோட்டில் பசுக்களை நடமாடவிட்டால் உரிமையாளர்களுக்கு அபராதம்: ஹரியானா முதல்வர் அதிரடி
பசுமாடுகளை சாலைகளில் நடமாடவிட்டால் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க ஹரியானா அரசு முடிவு செய்துள்ளது.
சண்டீகர்: பசுக்களை சாலைகளில் நடமாடவிட்டால் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று ஹரியான மாநில அரசு அதிரடியான உத்தரவை பிறப்பித்து உள்ளது.
குஜராத் மாநிலத்தில் கடந்த ஆண்டு பசு மாடுகளை இறைச்சிக்காக கடத்தியதாகக் கூறி தலித்துகள் சிலரால் அடித்துக்கொல்லப்பட்டனர். மேலும் சில இடங்களில் இஸ்லாமியர்கள் மீதும் இதே போன்று பசுப் பாதுகாப்பாளர்கள் தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதனிடையே பசுக்களுக்கும் அடையாள அட்டைகள் வழங்கினால், இது போன்ற தாக்குதல் சம்பவங்கள் நடக்காது என்று சமூக ஆர்வலர்கள் கருத்துக் கூறியிருந்தனர். இதைப் பரிசீலித்து தற்போது பசுக்களுக்கும் ஆதார் போன்ற அடையாள அட்டை கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பசுக்களை சாலைகளில் சுற்றி திரியவிட்டால் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று ஹரியானா மாநில அரசு அதிரடியான உத்தரவை பிறப்பித்து உள்ளது. ஹரியான முதல்வர் மனோகர்லால் கட்டார் தலைமையில் நடைபெற்ற அதிகாரிகள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஹரியானாவில் சாலைகளில் கால்நடைகள் அதிகமாக சுற்றி திரிகின்றன. குறிப்பாக பசுக்கள் ரோடுகளில் சுற்றி திரிந்தால் அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்வர் மனோகர் லால் கட்டார் கூறியுள்ளார்.