தொழிலாளர் உரிமை ஆர்வலர் நோதீப் கவுர் கைது.. 'சொல்வது அத்தனையும் பொய்' - ஹரியானா போலீஸ்
ஹரியானா: கவுர் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டதாக ஒரு சில சமூக ஊடக தளங்கள் மூலம் "தவறான" குற்றச்சாட்டுகள் பரப்பப்படுகின்றன என்று ஹரியானா காவல்துறை தெரிவித்துள்ளது
பஞ்சாப் மாநிலம் முக்ட்சார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நோதீப் கவுர். கடந்த மாதம், ஹரியானா மாநிலத்தின் சோனிபட் போலீசார் இவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது கர்னல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கவுர், ஜனவரி 12 ஆம் தேதி ஹரியானாவின் சோனிபட்டில் உள்ள ஒரு தொழில்துறை நிறுவனத்திடம் பணம் கோரியதாக கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் ஜாமீன் கேட்டு நோதீப் கவுர் தரப்பு, பஞ்சாப்-ஹரியானா ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. அதில், ஐபிசியின் 307 (கொலை முயற்சி) உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் பொய் புகார் பதிவு செய்து என்னை கைது செய்துள்ளனர்.
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு நான் ஆதரவு அளித்தேன். சோனிபட் மாவட்டத்தில் குண்ட்லியில் ஒரு போராட்டத்திற்காக மக்களை அணி திரட்டினேன். எனவே பொய்யான வழக்குகளை போட்டு முடக்கியுள்ளனர்.
போலீசார் என்னை, தலைமுடியை பிடித்து இழுத்து சென்றனர். எந்தவொரு பெண் காவல்துறை அதிகாரியும் இல்லாத நிலையில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு போலீஸ் அதிகாரிகளால் தாக்கப்பட்டேன்" என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
சறுக்கிய ஸ்கூட்டர்.. தாமதிக்காத பாதுகாவலர்கள்.. தப்பித்த மம்தா பானர்ஜி
இந்நிலையில் கவுர் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டுள்ளதாக ஒரு சில சமூக ஊடக தளங்கள் மூலம் "தவறான" குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன என்று ஹரியானா காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும், கவுர் கூறிய குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும், அவர் தொழிலதிபர்களிடம் பணம் பறித்தார் என்றும் ஹரியானா காவல்துறை கூறியுள்ளது.
குறிப்பாக கைது செய்யப்பட்ட தினத்தன்று, இரண்டு பெண் போலீஸ் துணையுடன் பெண்களின் காத்திருப்பு அறையில் கவுர் வைக்கப்பட்டதாக தெரிவித்த போலீஸார், காவல் நிலையத்திலிருந்து, அதே நாளில் மருத்துவ பரிசோதனைக்காக சோனிபட் சிவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளது.