நள்ளிரவில் படுக்கைக்கு வந்த நாகராஜா.. மிரண்டு போன மஞ்சலி.. குழந்தைகள் செஞ்ச சாமர்த்தியம்
குருகிராம்: நள்ளிரவில் பெண் ஒருவர் தன குழந்தைகளுடன் உறங்கிக்கொண்டு இருந்த நிலையில் திடீரென படுக்கையறைக்குள் புகுந்த 6 அடி நீள பாம்பு ஒன்று அவர்களை அச்சுறுத்தியது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் மற்றும் குழந்தைகள் அலறி அடித்து ஓடியிருக்கிறார்கள்.
பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பார்கள். குறிப்பாக நன்றாக ஆழ்ந்து உறங்கி கொண்டிருக்கும் போது திடீரென உங்கள் முன்பு 6 அடி நீளத்தில் ஒரு நல்ல பாம்பு படம் எடுத்து ஆடினால் எப்படி உணருவீர்களோ அப்படி ஒரு மனநிலையை ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த பெண் மற்றும் அவரது பிள்ளைகள் உணர்ந்துள்ளனர். அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள்.
ஹரியானா மாநிலத்தின் சுல்தான்பூரைச் சேர்ந்தவர் ராஜேஷ் குமார். இவரது மனைவி மஞ்சலி. இந்த ஜோடிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். திங்கள்கிமை இரவு ராஜேஷ்குமார் வீட்டை விட்டு வெளியே சென்று இருந்தார். அதேநேரம் அவரது மனைவி மஞ்சலி மற்றும் பிள்ளைகள் தனித்தனி அறையில் உறங்கி கொண்டிருந்தனர்.
மஞ்சலி அதிர்ச்சி
நள்ளிரவு வேளையில் திடீரென கண் விழித்த மஞ்சலி, தன் குழந்தைகள் உறங்கிக்கொண்டு இருந்த படுக்கையில் 6 அடி நீள நாகப்பாம்பு ஒன்று ஊர்ந்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அந்த பாம்பு மஞ்சலியின் மகனின் தலையணை அருகே இருந்தது. இதனால் பயந்து நடுங்கிய அவர், பிள்கைளை எழுப்பியதுடன் அவர்களுடன் உடனடியாக அறையை விட்டு வெளியேறினார்.
ஓடிவந்த கணவன்
இரவு வேலைக்கு சென்றிருந்த தன்னுடைய கணவர் ராஜேஷ் குமாருக்கு போனில் கூப்பிட்டு, வீட்டுக்குள் நாகப் பாம்பு புகுந்ததை தெரிவித்திருக்கிறார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த ராஜேஷ் குமார், சிறுது நேரத்தில் வீட்டுக்கு வந்துள்ளார்.
வனத்துறை மீட்பு
அவர் பாம்பை விரட்ட தீவிரமாக முயற்சி செய்தும் எந்த பலனும் இல்லை. இதனால் என்னசெய்வது என்று அவர் யோசித்த நிலையில், அவரது மகன் போர்வையை போட்டு பாம்பை மடக்கினான். இதையடுத்து ராஜேஸ்குமார் வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் படுக்கையில் படுத்துக்கிடந்த பாம்பை பாதுகாப்பாக பிடித்துக்கொண்டு சென்றனர்.
தூக்கிச்சென்ற வனத்துறை
பாம்பை படுக்கையைவிட்டு வனத்துறையினர் எடுத்துச்சென்ற பிறகே மஞ்சலி மற்றும் அவரது குழந்தைகள் நிம்மதி அடைந்தனர். முன்னதாக பாம்பு வெளியேறாமல் தப்பிக்க போர்வையை அதன் மீது போட்டு மடக்கி வைத்திருந்ததால் வனத்துறையினர் வந்ததும் பாம்பை அலேக்காக தூக்கிகொண்டு சென்றனர்.