பாபர் மசூதி வழக்கு.. அத்வானியின் ஜனாதிபதி கனவு கலைந்ததா? உமா பாரதி அமைச்சர் பதவிக்கும் ஆபத்து!
லக்னோ: பாபர் மசூதி வழக்கை அடுத்த இரு வருடங்களுக்குள் நடத்தி முடிக்க லக்னோவிலுள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றம்சாட்டப்பட்ட அத்வானி, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி ஆகியோர் இந்த வழக்கு விசாரணைக்காக அவ்வப்போது கோர்ட்டில் ஆஜராகும் சூழல் உருவாகியுள்ளது.
எனவே உமா பாரதியிடமிருந்து நீர்வளத்துறை அமைச்சர் பதவியை பறிக்க வேண்டும் என்ற கோரிக்கை காங்கிரஸ் சார்பில் எழுந்துள்ளது. மசூதியை இடித்ததை குற்றமாக கருதவில்லை என உமா பாரதி கூறியுள்ளதால் அவரது அமைச்சர் பதவியை பறிக்க வேண்டும் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், விரைவில் நடைபெற உள்ள குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் அத்வானியை வேட்பாளராக நிறுத்த பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது. ஆனால், குடியரசு தலைவராக இருந்து கொண்டு அவர் நீதிமன்றத்தில் ஆஜராவது முடியாது. மேலும் வழக்கு நிலுவையிலுள்ளபோது அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது முடியாது. 25 வருட வழக்கில், அத்வானி இன்றுதான் 2வது முறையாக கோர்ட்டில் ஆஜராகிறார். ஆனால், இனிமேல் அவர் தொடர்ந்து ஆஜராக வேண்டிவரும். எனவே, அத்வானியின் குடியரசு தலைவர் பதவி கனவு நிறைவேற வாய்ப்பில்லை என அரசியல் பர்வையாளர்கள் கூறுகிறார்கள்.